Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 07 - சு. சமுத்திரம்
இளங்கோ, திடீரென அம்மாவின் சத்தமும், ஒரு அந்நிய சத்தமும், கூட்டாகவும், தனித்தனியாகவும் ஒலிப்பதைக் கண்டு எழுந்து பார்த்தான். நடு வீட்டிற்குள் வந்து அந்த வீட்டை ஏற இறங்கப் பார்க்கும் அந்தப் போலீஸ்காரரை உற்றுப் பார்த்தான். அவர் வேறு யாரும் இல்லை. தெருவோர கரும்பு வியாபாரியிடம் செங்கோல் செலுத்தினாரே அவரேதான். அம்மா அழாக்குறையாகக் கத்தினாள்:
"ஒங்கக் கொடுமைக்கும் ஒரு அளவு வேண்டாமாய்யா? அந்த அநியாயக்காரியத்தான் உங்களால ஒண்ணும் செய்யமுடியல. ஒதுங்கிப் போறவனையாவது விட்டுத் தொலைக்கலாமே."
"நீங்க எது சொல்லணுமுன்னாலும் ஸ்டேஷன்ல வந்து சொல்லுங்க."
“நான் அனுப்பி வைக்காட்டி?”
"போலீஸ் மீறுறவங்களை எப்படி பிடிக்கணுமுன்னு வேலூர்லேயும், கே.கே. நகர்லேயும் டிரெயினிங் கொடுத்திருக்காங்க."
‘அவனை எதுக்காகக் கூப்பிடுறீங்கன்னு எனக்கு முதல்ல தெரிஞ்சாகணும்.''
"ஏதோ ஒருரு பொண்ணு, சரோசாவோ, ரோசாவோ, இவரு அவள கீழே பிடிச்சுத் தள்ளி ரத்தக் காயம் உண்டு பண்ணிட்டாராம். அதுக்கு முன்னால கற்பழிக்க முயற்சி செய்தாராம். இந்த இரண்டும் சீரியஸ்ஸான விவகாரம். அதனாலதான், இன்ஸ்பெக்டர் இவர கையோட கூட்டிட்டு வரச்சொன்னார். யாரு பக்கம் நியாயம் இருக்கு என்கிறது எனக்கு முக்கியமில்லை. இவர கையோட கூட்டிக்கிட்டுப் போறதுதான், முக்கியம்.”
"கான்ஸ்டபிள் சார், இது அநியாயம் சார். நான் ஒரு பாவமும் அறியாதவன் சார். இப்படி நடக்குமுன்னு தெரிஞ்சிருந்தால், ஒதுங்கிப் போயிருப்பேன் சார்.”
"எது பேசணுமுன்னாலும் ஸ்டேஷன்ல வந்து பேசுங்க மிஸ்டர்."