"இந்த மாதிரி ராத்திரியில தம்பிய கூட்டிக்கிட்டுப் போறது, எனக்கே ரொம்ப சங்கடமாகத்தான் இருக்குது. ஆனால் எங்க ஸ்டேஷனுக்குள்ளேயே, எங்க கண்ணு முன்னாலேயே ஒரு சின்னஞ்சிறு பொண்ண அடிச்சப் போட்டுட்டு அலட்சியமாகப் போகிறவனை நாங்கலட்சியப்படுத்தாமல் இருந்தால், எங்க பேரு போலீஸா? எப்படியோ சமாதானமாப் போனால் எல்லாருக்கும் நல்லது."
அந்த மூவரும்,பிரதான சாலைக்கு வந்தார்கள். வலப்பக்கமாகத் திரும்ப வேண்டியவர்கள், இடப்பக்கமாகத் திரும்புவது கண்டு போலீஸ்காரர் அவர்களை சந்தேகத்தோடு பார்த்தார்.
“அடுத்த தெருவில் தெரிஞ்சவர் ஒருத்தர் வீட்ல என் வீட்டுக்காரர் இருக்கார். அவரையும் கூட்டிக்கிட்டு போகலாம்."
"இவரு இங்கேயே நிக்கட்டும். நீங்க போயிட்டு வாங்க.”
"இந்தா பாருய்யா, நான் பனங்காட்டு நரி. இந்த மிரட்டுற வேலைய வெச்சுக்காத. ஒரு பத்து நிமிஷம் உன்னால பொறுக்க முடியல. ஆனால், அடாவடி செய்யறவங்கள வருஷக்கணக்காய் பொறுத்துக்க முடியும். நான் சொன்ன சொல்ல காப்பாத்துறவள். வேணுமின்னால் நீயும் கூடவா. அதே சமயம் நீ தடுத்தால் நாங்க நடக்கத்தான் போறோம். உன்னால முடிஞ்சத செஞ்சுக்கோ."
மகன், காவல் நிலையத்தில் சிக்கி அவனுக்கு இரவோடு இரவாக ஏதாவது ஆகிவிடக்கூடாதே என்று கோழி போல் தவித்த அந்தத் தாய், இப்போது பருந்து போல் வீறாப்புக் கொண்டாள். இளங்கோவின் கையைப் பிடித்துக் கொண்டு இடது பக்கமாக நடந்தாள். வலது பக்கம் கால் வைத்திருந்த போலீஸ்காரரும், அவர்களுக்குப் பின்னால் நடந்தார்.
தாயும், மகனும் ஒரு பெரிய பங்களாவிற்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு, போலீஸ்காரர் வருத்தப்பட்டார். கஷ்டப்பட்டார். புத்தியை கடன் கொடுத்து விட்டோமே என்பது போல் தொப்பியை சொறிந்தார். இதற்குள் மிஸ்டர். ரமணனும், பாமாவும் சத்தம் கேட்டு வெளியே வந்தார்கள். இளங்கோ இப்போது வீறாப்பாய் பேசினான் :