"நான், என்னை வழிமறித்த பொண்ணைத் தள்ளாமல் அவள் முன்னால தோப்புக்கரணம் போட்டிருக்கணுமாம். அவள் இரும்புக் கம்பிய திருடினதத் தடுக்காமல் எங்க வீட்டுல இருக்கிறதையும் எடுத்துக் கொடுத்திருக்கணுமாம். அப்படிச் செய்யாததுனால என்னை, ராத்திரியோடு ராத்திரியா விசாரிக்கப் போறாங்களாம்.'
பாமா கத்தினாள் :
"டாடி, இது டூ மச்... உங்க டெப்டி கமிஷனர் பிரண்டுக்கு போன் செய்யுங்க. இல்லாட்டி கமிஷனர் கிட்ட, நானே பேசப்போறேன்.'
பெரிய பெரிய வார்த்தைகளைக் கேட்ட போலீஸ்காரர் சிறிது சுதாரித்து, கையில் பிடித்திருந்த லத்திக்கம்பை முதுகோடு முதுகாக மறைத்துக் கொண்டார். இதற்குள் இளங்கோவின் தந்தை சுப்பையா, அந்தப் போலீஸ்காரரையே கமிஷனராய் அனுமானித்து ‘பணிவன்புடன்’ சொன்னார்:
"சார் நீங்க வாங்க... தப்பில்ல. எந்த வீட்டுக்கும் எந்த நேரத்திலயும் வர்றதுக்கு உங்களுக்கு ரைட் இருக்கு. இப்படி யூனிபார்ம்ல வராமல் மப்டியில் வந்திருக்கலாம். இதுவும் தப்பில்லதான்."
"என்ன அங்கிள் சம்பந்தம் இல்லாமல் பேசறீங்க! போலீஸ்காரர் காலிலயே விழுந்துடுவீங்க போலிருக்கே. இளங்கோவை கேவலப் படுத்தணுமுன்னுதானே, இவரு யூனிபாரத்துல வந்திருக்கார். டாடி, இன்னுமா உங்களுக்கு லைன் கிடைக்கல?"
ரமணன் டெலிபோனை சுற்றோ சுற்று என்று சுற்றி, டெபுடி கமிஷனரை எப்படியோ, கையும் டெலிபோனுமாகப் பிடித்து விட்டார்.
“ஹலோ! நான்தான் மிஸ்டர் ரமணன். தப்புத்தான்... என்னை நானே மிஸ்டர்ன்னு சொல்லிக்கக் கூடாதுதான். உங்கள மாதிரிதான் அமெரிக்காவில இருக்கிற என்னோட மகனும் அடிக்கடி சொல்லுவான். அப்புறம் ஒரு விஷயம். போலீஸ் எங்க ஏரியாவிலே போலீஸாவே இல்ல. ஓகே! சொல்ல வேண்டியத ஒரு நிமிஷத்துல என்ன, அரை நிமிஷத்திலேயே சொல்லிடறேன்.”