Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 08 - சு. சமுத்திரம்
ஒருவர், இரவில் தூங்கும்போது எந்த எண்ணம் கடைசியில் மனதில் நிற்கிறதோ, அதுதான் மீண்டும் கண் விழித்ததும், மனதில் முதலாவதாக வரும் என்பார்கள். அன்று இரவு முழுவதும் அப்படியே தூங்கிப் போன இளங்கோவின் மனதில் காலையில் எடுத்த எடுப்பிலேயே சரோசா இரும்புக் கம்பிகளுக்கிடையே கையில் விலங்கிடப்பட்டு, அவனைப் பார்த்து தலைகவிழ்ந்து நின்றாள். அதற்குப் பிறகு தான், பாமா லேசுலேசாக தலையில் கொண்டை போட்டுக் காட்டும் பாவனையோடு, எட்டியெட்டிப் பார்த்தாள்.
இளங்கோ, அம்மா நீட்டிய இட்லிகளை விழுங்குவது தெரியாமல் விழுங்கிவிட்டு, பேண்ட் சட்டையை அவனைப் போல் வீறாப்பாக இழுத்துக்கொண்டு, வெளியே புறப்பட்டான். அவனுக்கு 'சப்' என்றாகிவிட்டது. பாமா வீட்டிற்குப் போவதற்கு அவன் படியிறங்கியபோது, அவள் அப்பா ரமணனோ, மாருதி காரில் அங்கே வந்தார். கதவைத் திறந்து அவனை ஏறிக்கொள்ளும்படி சைகை செய்தார். இதற்குள், பாமா பின்பக்கமாக வந்து கைகளைப் பிடரிக்குக் கொண்டு போய் தலைமுடியை தலைக்குமேல் கொண்டுவந்து அவனைப் பார்த்துச் சிரித்தாள். அம்மா ஒருபக்கமும், இன்னொரு பக்கம் பாமாவும் கையசைத்து வழியனுப்ப மாருதி கார் அந்தப் பெயருக்குரிய வேகத்தில் பறந்தது.
அந்தக் கார், காவல்நிலைய வளாகத்திற்குள் நுழைந்ததும், நேற்றிரவு வீட்டிற்கு வந்திருந்தாரே அதே போலீஸ்காரர் அவர்களைப் பார்த்து அலறியடித்துக் கதவைத் திறந்தார். எந்தப் போலீஸ்காரராலும் இப்படி ஒரு மரியாதைக்குட்படாத ரமணன் உடம்பை நெளித்து நடப்பதோ அல்லது அக்கம்பக்கம் பார்த்து நடப்பதோ கவுரவக்குறைவு என்று நினைப்பது போல், லகான் போட்ட குதிரைபோல் நேராக நடந்தார். இளங்கோ, அவர் பின்னால் ஆட்டுக்குட்டி போல் போனான். இருவரும் கிரைம் அறைக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த அதே சப்-இன்ஸ்பெக்டர் விழுந்தடித்து நின்றார்.
"உட்காருங்க... மிஸ்டர் ரமணன் சார்... இளங்கோ! நீங்களும் உட்காருங்க..."
“ஓயர் ஈஸ் யுவர் இன்ஸ்பெக்டர்...? இன்ஸ்பெக்டரை நான் பார்க்கலாமா...?"
"உங்களுக்காகத்தான் காத்திருக்கார் சார், வாங்க சார்." மூவரும் முதல் மாடியில் உள்ள இரண்டாவது அறைக்குள் வந்தார்கள். ரமணன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.