இளங்கோ பிரமை பிடித்து நின்றான். ரமணன் சொல்வதும் ஒரு வகையில் நியாயமாகப் பட்டது. அதே சமயம் அவளை அநத் நிலையில் காண்பதும் அநியாயமாகப் பட்டது.
இந்தக் குழப்பம் போதாதென்று கான்ஸ்டபிள் திருமலையப்பன் எங்கிருந்தோ வந்தது போல் அவன் அருகில் வந்து கத்தினார்:
"நீ சரியான பிராடுய்யா! இப்ப நான் ஒன்ன அரஸ்ட் செய்யப் போறேன்; எந்த டெப்டி கமிஷனர் வந்து தடுக்கிறார்னு பார்க்கிறேன். ஒனக்கு இன்புளுயன்ஸ் இருக்கிற திமுறு... ஏய்யா! பெரிய வீட்டுப் பையா! நேற்று என்ன சொன்னே? ஆட்டோ டிரைவர் கிட்டே பணம் கொடுத்துறதாய் சொல்லிவிட்டு, சொன்னபடி கொடுத்தியா? ஆட்டோ ஸ்டாண்டுல நின்ன அந்த டிரைவர நான் கேட்டப்போ, நீ அவனை இந்த ஸ்டேஷனுக்கு வெளியேயே விட்டுட்டு தலைமறைவா போயிட்டதா சொல்றான்?"
இளங்கோ, தன்னை ஒரு தடவை ஆட்டிக்கொண்டான். அப்போதுதான், அவனுக்கு உறுத்தியது, செய்த தவறை எப்படி உற்றாரிடம் சொன்னால், அவர்கள் திட்டி விட்டு விடுகிறார்களோ, அப்படி அந்தப் போலீஸ்காரரை ஒரு உறவினராக நினைத்து, அவரைப் பார்த்துச் சங்கடமாய் சிரித்தான். உடனே திருமலையப்பனுக்குக் கோபம் வந்தது. காக்கிச்சட்டை போனாலும் பரவாயில்லை, அவனையும் கழட்டிவிடுவது என்று தீர்மானித்தார். இதைப் புரியாமல் இளங்கோ, அவர்கைகளைப் பிடித்துக் கொண்டே பதில் அளித்தான்:
"நான் அறிவுகெட்ட முட்டாள் சார். நேற்று நடந்த அமர்க்களத்தில் ஆட்டோக்காரரை மறந்திட்டேன். மன்னிச்சிடுங்க சார்..."சாரி."
"இந்த ‘சாரி, மன்னிச்சிடுங்க' என்கிற வார்த்தைகளை வச்சே நாட்டிலே எல்லோருடைய பிழைப்பும் ஓடுதுய்யா. கொலைகாரனும் இதைத்தான் சொல்றான். அரசியல்வாதியும் அதையே சொல்றான். உன்னோட மன்னிப்பிலே என்னோட இழந்த மானம் திரும்பி வருமா? டிரைவர் கிட்டே, நானாத்தான் வம்பை விலைக்கு வாங்குனேன். உடனே அவன் உன்னோட மோசடியச் சொல்றான். பக்கத்தில இன்னொரு ஆட்டோ டிரைவர், என்ன சொல்றான் தெரியுமா? 'போலீஸ்ல அவனவன், ஆட்டோ வாடகையிலே கொஞ்சத்த மாமூலா வாங்குவான்; இவரோ