கீழே குனிந்தாள். நிமிர்ந்தாள். அலை அலையாய் கண்ணீர்விட்டு அதை அழுகின்ற வாய்க்குள்ளேயே உள்வாங்கியபடி, அவள் ஓலமிட்டாள்:
"சாரே... சாரே... இளங்கோ சாரே! நான் செய்தது அல்லாம் தப்புத்தான்... என்னை மன்னிச்சிடு சாரே. நீ சொன்னாத்தான் என்னை விடுவாங்களாம்."
இன்ஸ்பெக்டருக்குக் கோபம் வந்துவிட்டது.
"அதுக்குள்ள இத எவன்டி உனக்குச் சொல்லிக் கொடுத்தது? மொதல்ல அந்தக் குழந்தையை எங்கே வைத்திருக்கேன்னு இப்போ எனக்குத் தெரிஞ்சாகணும். முன்னால சாராயம் காய்ச்சினே, சரின்னு விட்டுட்டோம். அங்கேயும் இங்கேயும் சிலரை அடிச்சே... கண்ணை மூடிக்கிட்டோம். இப்ப என்னடான்னா, குழந்தையை திருடினதையும் கண்டுக்காம இருப்போமுன்னு நினைச்சால் நீதான் ஒரு குழுந்தை. சொல்லுடி, ரமணன் வாய்விட்டார்க் கொழுந்தையை எங்க வைச்சிருக்கே?”
"இன்ஸ்பெக்டர் சார், டி.வி.செட், பிரிஜ்-ஜப் பத்தியும் கேளுங்க சார்."
"கொஞ்சம் சும்மா இருங்க மிஸ்டர் ரமணன்; முதலில் உயிர்ப்பிரச்சினை, அப்புறந்தான் ஜடப்பிரச்சினை. சொல்லுடி... குழந்தையை எங்கே கொண்டு போய் வைச்சிருக்கே?"
“அய்யோ சாரே! நான் அப்படிப்பட்டவள் இல்லீங்க சாரே. நெசமா சாரே, சத்தியமா சாரே”
"இன்னிக்கிக் காலையிலே சப்-இன்ஸ்பெக்டர் கிட்ட குழந்தையை திருடி ஏதோ ஒரு கிராமத்துல வைச்சிருக்கிறதாய் சொல்லியிருக்கே.”
"சொன்னது நிசந்தான் சாரே! அடி பொறுக்க முடியாம அப்படிச் சொன்னேன் சாரே... மொகத்துல விழுந்த குத்துகள தடுக்கிறதுக்கு அப்படிப் பொய் சொன்னேன் சாரே. நான் பொறுக்கிதான்; இல்லங்கல. ஆனால் கொழுந்தையை திருடுகிற அளவுக்கு நான் மோசமானவள் இல்ல சாரே! சத்தியமாச் சொல்றேன் சாரே. பெரிய பெரிய திருட்டெல்லாம் செய்யறவள் இல்லே சாரே!'
“அப்போ... குழுந்தைய கொன்னுட்டே... அப்படித்தானே?"