"நானே தாயில்லாமல் வளர்ந்தவள் சாரே... ஒரு குழந்தையோட கஷ்டம் நஷ்டம் தெரிஞ்சவள் சாரே... நான் அப்படிச் செய்யறவ இல்ல சாரே!”
"சரி, உன்ன விசாரிக்கிற விதமா விசாரித்தாத்தான் சொல்லுவே. ஆனால் ஒண்ணு, இந்தத் தடவை நீ தப்பிக்கவே முடியாது. சாராயத்துக்கு ஒரு வருஷம்; எல்லாத்துக்கும் மேல குழந்தையை கடத்தினதுக்கு அல்லது கொன்னதுக்கு ஆயுள் தண்டனைன்னு உனக்கு வாங்கிக் கொடுக்கிறோமா இல்லையான்னு பாரு! அவள இழுத்துக்கிட்டுப் போய்யா.”
சரோசா, இப்போது இளங்கோவை விட்டுவிட்டு முகத்தை உப்ப வைத்துக் கொண்டு காலாட்டியபடியே அலட்சியமாக இருந்த ரமணனைப் பார்த்துக் கும்பிட்டாள். பெருமூச்சு, நெடுமூச்சாய் விட்டு அழுகின்ற வாயை அப்படியே விட்டுவிட்டு, மீண்டும் இளங்கோவைப் பார்த்தாள். தட்டுத்தடுமாறி கைகளை தலைக்குமேல் கொண்டு போய் அரற்றினாள் :
''சாரே... சாரே! இரும்பு வலையை பிய்ச்சது தப்புத்தான், ஒன்னோட ஆத்தாவ அடிச்சதும் தப்புத்தான்... உன்னை டபாய்ச்சதும் தப்புத்தான். ஆனால் அத்தனையும் தாத்தாவுக்கு ஒரு பன்னுக்காகவும், ஒரு டீக்காகவும் தான். எனக்குத் தேங்காய் பறிக்கத் தெரியும். ஆனால் தங்கத்தப் பறிக்கத் தெரியாது. நான் போயிட்டா என் தாத்தா ஒரேயடியா பூடுவாரய்யா. ஒனக்குக் கோடிப் புண்ணியம் சாரே. இன்ஸ்பெக்டர் ஐயாகிட்ட சொல்லு சாரே. வேணுமுன்னா இந்த ஏரியாவவிட்டே ஓடிடுறேன் சாரே..."
"ஒன்ன ஓட்டத்தான் போறோம். வேலூருக்கோ, சென்ட்ரல் ஜெயிலுக்கோ அனுப்பத்தான் போறோம். ஏய்யா அவள பேசவைச்சி வேடிக்கைப் பார்க்கிறீங்க! அவள் வாயிலிருந்து உண்மையை வரவழைக்கிற விதமா வரவழைங்க!”
கான்ஸ்டபிள்கள், அவளைத் தள்ளப் போனார்கள். அதற்குள் அவள் நடந்தாள். இளங்கோவை வெறுமையோடு ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு இன்னொரு கும்பிடு போட்டபடியே மெல்ல மெல்ல நடந்து, அவர்கள் கண்ணிலிருந்து மறைந்தாள்.
இளங்கோவிற்கு என்னவோ போலிருந்தது. அவளின் ஒவ்வொரு கும்பிடும், அவன் இதயத்தை