சமூகத் தொண்டன். நேற்று உங்க ஆட்கள்கிட்டயே இவன் பட்டபாடு... ஒரே பாடு... இதைப் பார்த்த பிறகு எவன் போலீசிற்கு ஒத்துழைப்புக் கொடுப்பான்? இவ்வளவுக்கும் அந்தப் பொண்ணு ஒரு குழந்தைய திருடினவள்..."
"நடந்ததை மறந்துடுங்க... இனிமேல் நடக்கப் போறதை கவனிப்போம். இந்தாப்பா அவள் பேரு என்ன சரோசாவா? கூட்டிக்கிட்டு வா, க்விக். என்ன சார் செய்யறது? எல்லாப் போலீசும், விவிஐபி பாதுகாப்புக்குப் போக வேண்டியதிருக்கு. பஞ்ச பாண்டவர் மாதிரி, ஐந்து கான்ஸ்டபிள்களை வைச்சிக்கிட்டு, இந்த ஏரியா முழுவதையும் கவனிக்கணும். எப்படி முடியும்? உங்கள மாதிரி பப்ளிக் பர்ஸ்னாலிட்டிகள் டெப்டி கமிஷனர்கிட்ட இதையெல்லாம் சொல்லணும்”
"கண்டிப்பாய் அடுத்தவாரம் உங்க டெப்டி கமிஷனர் என் வீட்டுக்கு வரான்! சாரி... கிளாஸ்மேட்டாக இருந்தாலும் உங்க முன்னால ‘இர்' போட்டுத்தானே பேசணும்...? - டின்னருக்கு வருகிறாரு. அவர்கிட்ட விவரமா சொல்றேன்.”
சரோசாவை, இரண்டு கான்ஸ்டபிள்கள் கொண்டுவந்து, இன்ஸ்பெக்டர் அறைக்கு வெளியே நிறுத்தினார்கள். நேற்று அவளிடம் தோழமையோடு பேசிய அதே, அந்த கிரைம் சப்-இன்ஸ்பெக்டர், இப்போது அவள் கழுத்தைப் பிடித்து உள்ளே தள்ளினார். அவள் விழாக்குறையாக இன்ஸ்பெக்டர் முன்னால் குனிந்து நின்றாள். பிறகு அங்குமிங்குமாய் பார்த்தாள். இளங்கோவை திடுக்கிடாமல் பார்த்தாள். பிறகு, அரற்றியபடியே இளங்கோவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். அவளின் மேல் உதடு வீங்கிப் போயிருந்தது. அழகான மஞ்சள் துண்டுபோல் தோற்றம் காட்டும் அந்த உதடு, இப்போது கோவைப் பழமாய் சிவந்து அதே அளவிற்கு வீங்கி கீழ் உதட்டை மறைத்துக் கொண்டிருந்தது. கீழ் உதடோ நைந்து ரத்தக் கசிவோடு சதைக் கட்டிபோல் தொங்கியது. இரண்டு கண்களின் புருவங்களும், வீங்கிப் புடைத்து முன்பக்கமாய் குவிந்து, கண் இமைகளை மறைத்தன. கன்னங்களும் வீங்கிப் புடைத்து ரத்தம் சிந்திக் கொண்டிருந்தன. தலைமுடியை யாரோ இறுக்கிப்பிடித்து, நீண்ட நேரம் வைத்தது போல், கோரம்புல் கட்டுப்போல மேல்நோக்கி நீண்டிருந்தது. நெற்றிப் பொட்டில், குங்குமம் வைத்ததுபோல், ஒரு ரத்தக்காயம். கைகளில் சிராய்ப்புக்கள். அவள் கணுக்கால்களில், பாவாடை பிய்ந்து சிவப்புச் சிவப்பாய் தெரிந்தது.
சரோசா, இளங்கோவை காலில் விழுந்து கும்பிடப்போனாள். அவன் சற்றுத் தள்ளி நின்றதும்,