ஈட்டி போல் குத்தியது. அவளின் ஒவ்வொரு விசும்பலும் அவன் நெஞ்சைக் கசக்கியது. ஏதோ ஒன்று அருவமோ, உருவமோ... ஆணோ, பெண்ணோ, அலியோ... அது அவன் அடிவயிற்றிலிருந்து பீறிட்டு உச்சந்தலையை முட்டி அங்குமிங்குமாக தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. பக்கத்து அறையிலோ அல்லது அதற்கு அடுத்த அறையிலோ, “ஐயோ... என்னால தாங்க முடியல, என்ன உதைக்காதீங்க, நாயினா! நாயினா!” என்ற அவலச்சத்தம், அவன் காதுகளைக் குத்தியது.
ரமணனும், இளங்கோவும் இன்ஸ்பெக்டர் எழுந்து நின்று வழியனுப்ப, கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் வாசல்வரை வந்து நிற்க வெளியே வந்தார்கள். ரமணன், மாருதி காரில் ஏறிக்கொண்டு "அப்போ நீ வீட்டுக்குப் போ. எல்லார்கிட்டயும் இந்த சந்தோஷச் செய்தியை சொல்லு" என்று சொல்லிவிட்டு காரை சத்தம் போட வைத்தார். அப்போது
ஒரு முதியவர் - சரோசா ஊட்டி விட்டாளே அந்த மெல்லிய மனிதர் - மூன்று லுங்கிக்காரர்களுக்கு மத்தியில் இருவர்மேல் தோள் போட்டு, ஒருவன் மார்பில் முதுகைப் போட்டு அங்குலம் அங்குலமாய் அந்த காவல் நிலைய வளாகத்திற்குள் வந்து கொண்டிருந்தார். அவரது பொட்டைக் கண்களில் நீர் கசிந்தது. கூடவே ஈக்களும் மொய்த்தன. அடிக்கடி அந்த ஈக்களை கையாட்டி விரட்டும் அந்த மனிதர் இப்போது அந்த சொரணையே இல்லாமல் “சரோ... சரோ...” என்று முனகிக் கொண்டே நத்தை மாதிரி நகர்ந்து கொண்டிருந்தார்.
இளங்கோவிற்கு, கண்கள் அக்கினிக்கட்டிகளாய்ச் சுட்டன. நாடி நரம்புகள் தெறித்தன. உடம்பு ரத்தம் முழுவதும் வேர்வையாய் வெளியே வந்து கொண்டிருப்பது போல் இருந்தது. ரமணன், காரை நகர்த்தப் போனபோது, அவர் அருகே போனான். மெள்ளக் கேட்டான்:
"இதோட விட்டுடலாம்னு நினைக்கிறேன் அங்கிள். அவளைப் பார்க்கப் பாவமா இருக்கு ஒழிஞ்சு போறாள். அவள விட்டுடச் சொல்லலாம்."
"என்னப்பா... இளங்கோ உனக்கென்ன பைத்தியமா? அப்புறம் நாம் என்ன சொன்னாலும் போலீஸ் கேப்பாங்களா? - என்னோட பிரிஸ்டீஜ் என்னாகிறது? அதோட நீ அவளை கற்பழிக்க முயற்சி செய்துட்டு அது வெளியில தெரியக் கூடாதுன்னு புகாரை வாபஸ் வாங்குறேன்னு போலீஸ் பிளேட்ட திருப்பினால், என்ன செய்வே...? ஓகே... ஓகே... டி.வி.யில போய் ஒலியும் ஒளியும் பாரு. மனசு சரியாயிடும்."