"எப்படியாவது, அவளைக் காப்பாற்றப் பாரு. அவளுக்காக இல்லாட்டியும் அவள் அப்பாவுக்காகக் கொஞ்சம் விட்டுக் கொடு. எந்த செல்வாக்கைக் கொண்டு வந்தாயோ, அது மூலமே அவளுக்கு விடுதலை வாங்கிக் கொடு. இப்பவே... இன்ஸ்பெக்டர் கிட்டே நான் சொன்னேன்னு சொல்லாம, நீயே கேட்கிற மாதிரி கேளு.''
அடிகொடுத்த சரோசாவை, அடிபட்ட சரோசாவாகப் பார்த்த வேளையிலே இருந்து, இளங்கோ மனமும் அடிபட்டு வீங்கியது. குழந்தையை, அவள் கடத்தியிருப்பாள் என்று அவனும் நம்பவில்லை. மனம் வலிப்பு வந்தது போல் இழுத்தது. நெஞ்சுக்குள்ளே ஒன்றும், கண்ணுக்குள்ளே ஒன்றும், எதிர் எதிராய் இழுத்துக் கொண்டன. திருமலையப்பன் கொடுத்த உந்தலில், அவன் இன்ஸ்பெக்டர் இருந்த மாடிக்கப் படி ஏறினான். அந்த இன்ஸ்பெக்டர் முன்னால் போய் நின்றான்.
இன்ஸ்பெக்டர், ஒரு மைக்கில் எள்ளும் கொள்ளுமாய் பேசிக் கொண்டிருந்தார். மீண்டும் அந்த மைக் அலறியபோது, அதற்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தார். பிறகு, "நன் இன்ஸ்பெக்டர் இல்லேய்யா; இந்த ஏசியும், டிசியும் இருக்கிற வரைக்கும், நான் குளோரிபைடு கான்ஸ்டபிள்தான்"
என்று கிரைம் சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்துச் சொன்னார். அந்த கிரைமோ, அப்படியானால் அந்த இன்ஸ்பெக்டர், தனக்கு ஒரு சல்யூட் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் போல் தலையை ஆட்டினார்.
இளங்கோ லேசாய் இருமினான்; இன்ஸ்பெக்டர் கேட்டார்: "என்னப்பா வேணும்?"
"நான் டெபுடி கமிஷனருக்கு வேண்டிய அங்கிளோட அப்போ வந்தேனே... சரோசாவை விட்டுடுங்க சார்."
“ஏய்யா, டெபுடி கமிஷனருக்குத்தான் நான் சல்யூட் அடிக்கணும்... உனக்கும் அடிக்கணுமா? என்னய்யா நீ... பரமசிவம் கழுத்துப் பாம்பு மாதிரி ஆடுறியா? அவளுக்கும் உனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு. டெபுடி கமிஷனர் கிட்டே நானே பேசுறேன். சரி இப்போ மரியாதையா வீடு போயிச்சேரு. சரோசாவை எப்படி டீல் பண்ணணும்னு எங்களுக்குத் தெரியும்."