எதிர்காலம் இல்ல. நிற்பதற்கு நிகழ்காலமும் இல்ல. முக்காலமும் இல்லாத அஞ்ஞானிப் பொண்ணு. எப்படி கோழியை அடித்துச் சாப்பிடுவதை நாம் இயல்பாய் நினைக்கிறோமோ, அப்படி அவளும், திருடுறதை, தப்பாய் நினைக்கல. அது தப்பு என்கிற உணர்வே இல்லாதவள். இவள மாதிரி ஆட்களுக்கு மனசுன்னு எதுவும் கிடையாது. அது, பிறந்தபோதே வயிற்றுக்குள் போயிடும். இவளோட நிலைமைய யோசிச்சுப் பார். ஆட்டோக்காரனுக்குப் பணம் கொடுக்கிற நினைப்பில்லாத உன் பின்னணியிலே அவளுக்காகவும் யோசிச்சுப்பார்; நமக்காவது யோசிக்க நேரமிருக்கு; அவளுக்கு அதுக்கு நேரமும் இல்ல, வேளையும் வரல. அவளை மாதிரி ஆளுங்க யோசிக்க ஆரம்பிச்சா, அப்புறம் நாம் இந்த சமுதாய அமைப்பைப் பற்றி பயப்பிராந்தியோட யோசிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.”
இளங்கோ, யோசிப்பது போல் முகத்தைத் தூக்கினான். அவன் முன்னால் சரோசாவின் உப்பிப்போன முகம் உரசியது. அவள் ரத்தத் துளிகள் அவன் கண்களுக்குள் ஊடுருவுவது போல் இருந்தது. மாடியை அண்ணாந்து பார்த்து, அவள் வைக்கப்பட்டிருக்கக் கூடிய இடத்தையே பார்த்தான். பிறகு திருமலையப்பனைப் பார்த்து கைகளைப் பின்னிப் பின்னி எடுத்தான். அவரும் பேச்சால் பின்னினார்:
“நானும் இந்த சரோசாவைப் பற்றி விசாரித்தேன். சாராயக்காரிதான்; சின்னத் திருடி. அப்பனுக்காகத் திருடுறாளே தவிர, நடுத்தர வர்க்கத்தில், ஆபீஸர் அப்பன்களையே அரசாங்கத்தைத் திருட வைக்கிறாங்களே, அப்படி இல்ல. உள்ளே இருக்க வேண்டியவள் தான்; ஆனால், அதுவும் ஒரு வாரம், இரண்டு வாரத்திற்குத்தான். நிச்சயம் அவள் குழந்தையைத் திருடியிருக்க மாட்டாள். அந்தத் தகுதி இன்னும் அவளுக்கு வரல. ஆனால், இப்போவே அவள் மேலே குழந்தையைக் கொன்றதாய் குற்றஞ்சாட்டப் போறாங்க. இந்த நாட்டில் ஒரு ஏழைக்கு குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. பிறத்தியார் செய்த குற்றங்களையும் இவள் தலையில போடுவாங்க. கண்டுபிடிக்க முடியாத குற்றத்திற்கு இவள் காரணமாயிடுவாள். கடைசியில் அவளுக்கு ஆயுள் தண்டனைதான் கிடைக்கப் போகுது. ஒரு சின்னக்குற்றம் செய்து விட்டால் அப்புறம், செய்யாத பெரிய குற்றங்களுக்கு பொறுப்பு வகிக்கணும்; இது தான் இன்றைய நிலைமை.”
“நான் என்ன சார் செய்யணும்? நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன் சார்.'"