வாடகையிலே கொஞ்சத்தையும் விடாமே மாமூலாய் வாங்குற டைப்புன்னு' கத்தறான். என்னால எதுவும் செய்ய முடியல. காரணம், அவங்க பக்கம் நியாயம் இருக்கு. இப்படி தைரியமாப் பேசறதுக்கு அவங்களுக்கு யூனியன் இருக்கு. எனக்கு என்னய்யா இருக்குது?"
போலீஸ்காரர்களும் குழந்தையாகலாம் என்பதுபோல், கைது செய்யப்பட வேண்டிய ஒருவன் முன்னாலேயே கைதாகி நிற்பது போல் நின்ற திருமலையப்பனைப் பார்த்து இளங்கோ திகைத்தான். அவருக்கு ஆறுதல் சொல்வது போலவும், தனக்குத் தானே தேறுதல் சொல்வது போலவும் பேசினான்:
"சார், நீங்க என்னை என்ன செய்தாலும் தகும் சார்; ஆனால் நான் வேணுமுன்னு அப்படிச் செய்யல சார். உண்மையைச் சொல்லப் போனால், இப்போதான் அந்த ஆட்டோவே ஞாபகத்துக்கு வருது. நீங்க கைது செய்தாலும் ஒரு உண்மையான குற்றவாளியைத்தான் கைது செய்யப் போறீங்க. போலீஸ்காரங்க லாக்கப்புல என்னை ஜட்டியோட நிறுத்துமுன்னாலே இந்த சட்டைக்குள்ள இருக்கிறதை தந்துடறேன் சார். இந்தாங்க சார், நூறு ரூபாய். அந்த ஆட்டோ டிரைவர்கிட்டே நீங்களே கொடுத்துடுங்க சார்."
"யோவ், யோவ், கையை சுருக்குய்யா. உன்கிட்டே நான் ஏதோ ‘சம்திங்' வாங்குறதாய் எங்க ஆட்களே நினைப்பாங்க. சாயங்காலமாய் அதோ அந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு வா. நானும் 'பீட்டுக்கு' போயிட்டு வந்துடறேன். என் முன்னாலே நீ அவர்கிட்ட பணத்தைக் கொடுக்கணும்."
"நானே இப்படி நடந்துக்கிட்டது எனக்கு ஆச்சரியமாய் இருக்குது சார். பாவம், நான் கொடுக்கிற பணத்திலேயே வீட்டோட மத்தியான ஸ்டவ்வ எரிய வைக்க நினைச்சிருப்பார் அந்த ஆட்டோ டிரைவர். என்னைப் பற்றி நினைக்கவே எனக்கு வெட்கமாய் இருக்குது. ஆனாலும் நீங்க நினைக்கிறது மாதிரி நான் பிராடு இல்லை சார். எவ்வளவு அவமானமா பீல் பண்ணுறேன் தெரியுமா?"
“நான் விளக்கம் சொல்றேன் கேள். நேற்று உன் தலையிலே ஏற்றப்பட்ட சுமையிலே, உனக்கு ஆட்டோக்காரன் பாரம் தெரியல. இப்படித்தான் அந்த சரோசாவும்; அவளுக்கு இருக்கிற பிரச்சினையிலே அவள் மற்றவங்களுக்குக் கொடுக்கிற பிரச்சினைகளை நினைத்துப் பார்க்கல. அவளை மாதிரி ஆட்களுக்கு திரும்பிப் பார்க்க கடந்த காலம் இல்ல. ஏறிட்டுப் பார்க்க