"ஐ அம் ரமணன்... கம்பெனி எக்ஸிகியூட்டிவ். நீங்க இன்ஸ்பெக்டரா?"
"உட்காருங்க மிஸ்டர் ரமணன்... உட்காருங்க. தம்பி நீயும் உட்காருப்பா”
"இனிமேல் எது நடந்தாலும் என்கிட்ட சொல்லுங்க சார். டெப்டி கமிஷனரை கஷ்டப்படுத்த வேண்டாம். என்னை கஷ்டப்படுத்துங்க. இனிமேல் உங்க ஏரியாவோட செக்யூரிட்டிக்கு நான் பொறுப்பு. இந்தாப்பா மூணு கப் காப்பி வாங்கி வா."
ரமணனும், இளங்கோவும் அந்த இன்ஸ்பெக்டரையே பார்த்தார்கள். அவருக்கு நாற்பது வயதுக்கு சற்று மேலேயோ, கிழேயோ இருக்கும். சற்று கனமான உடம்பு; என்றாலும் காற்றில்கூட பறக்கமுடியும் என்பது மாதிரியான லாவகம். இழுத்துப்பிடித்தது போன்ற தொய்வில்லாத முகம்.
இன்ஸ்பெக்டரை விரட்டுவதற்கென்றே வந்த ரமணன், அவரது தோற்றத்தைப் பார்த்ததும் கட்சி மாறிவிட்டார். தோல் பைக்குள் வைத்திருந்த ஒரு கற்றைக் காகிதத்தை அவரிடம் நீட்டிவிட்டு, ஒவ்வொரு பேப்பருக்கும் விளக்கம் சொல்வதற்காக அவர் மனத்திற்குள் ஒத்திகை போட்டார். இதற்குள் இன்ஸ்பெக்டர் முந்திக் கொண்டு பேசினார்:
"நீங்க சொல்ல வேண்டியதே இல்ல சார்! நேற்று நைட் முழுவதும் இதே வேலைதான். மூணாவது கிராஸ் தெரு முனையில் ஒரு ஓலைவீட்டுல இருக்கிற ருக்குமணி என்கிற பால்காரியோட ஆறுவயசுப் பையனைக் காணவில்லை. அதே கிராஸ் தெருவில எட்டாம் நம்பர்ல அழகிரி சாமியோட டி.வி. செட் போயிட்டுது, இரண்டாவது கிராஸ்ஸ சம்புலிங்கம் வீட்டுல சம்புல போட்டிருந்த பூட்டும் கைப்பம்பும் போயிடுத்து. இதுங்கதான் உங்களுக்குத் தெரியும். இன்னொன்றை நான் சொல்றேன், கேளுங்க; நேத்து இரவு நைட்ல, மெயின் ரோட்டுல இருக்கிற நியாயவிலைக் கடைய உடைச்சி ஏழுெட்டு மூட்டைகளை எத்திக்கிட்டுப் போயிட்டாங்க. அந்த ஏரியாவில இருக்கிறவங்க மனுஷங்களா? மாடுங்களா? மக்களோட ஒத்துழைப்பு இல்லாம குற்றங்களைக் கண்டுபிடிக்க முடியாது ஸார்."
"அப்படியும் சொல்ல முடியாதுங்களே. இந்தப் பையன் இளங்கோ, என்னை மாதிரியே ஒரு