இளங்கோ, இன்ஸ்பெக்டரை மருவி மருவிப் பார்த்துவிட்டு, நடந்து வெளியே வந்தான். வலது பக்கம் ஒரு முனகல் சத்தம் கேட்டது. சரோசாதான். 'நாயினா, நாயினா' என்ற குரல்; 'டமால், டமால்' என்ற சத்தம். 'அடிக்காதீங்க, அடிக்காதீங்க' என்ற அலறல். "கொயந்த இருக்கற இடத்தைக் காட்டுறேன். காட்டுறேன்' என்ற கூப்பாடு. “அய்யோ, என் வயிறு போச்சே" என்ற வார்த்தை, அப்புறம் நெடிய மௌனம். மூச்சு முட்டியதோ, மூச்சு அடங்கிப் போனாளோ? இளங்கோ, அந்த ஓலமிட்ட உள்ளறைக்குள் போகப்போவது போல் நடந்தான். இதற்குள் இன்ஸ்பெக்டரின் திட்டுக்களை அவன் வாங்கியபோது, பார்த்துக் கொண்டு நின்ற ஒரு போலீஸ்காரர் அவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ள வந்தார். இளங்கோ, கீழே ஓடினான். இதனால் அவர் கெட்ட வார்த்தையில் அவன் அம்மாவை அர்ச்சித்தது அவனுக்குக் கேட்கவில்லை.
இளங்கோ, காவல்நிலைய வளாகத்திற்குவெளியே வந்தான். கண்ட கண்ட இடமெல்லாம் சுற்றினான். பிறகு, வீட்டுக்கு வந்தான். வாசலிலேயே, தாய்க்காரி வரவேற்றாள். அவனை பிரமிப்போடு பார்த்தபடி ஒரு சேதி சொன்னாள் :
"பாமாவோட அப்பா, ரமணன் சார், இப்போதான் டெலிபோன் செய்தார். இன்னக்கி, அசோசியேசன் கூட்டம் சாயங்காலம் நடக்கப் போகுதாம். சரோசாவுக்கும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஒரு உறவு இருக்கிறதால, அவள் குழந்தையைக் கொன்ன குற்றத்தை கமிஷனர் ஆபீஸ் கிரைம் பிராஞ்ச் விசாரிக்கணுமுன்னு தீர்மானம் போடப் போறாங்களாம். ஏண்டா, நல்லா உதச்சிருப்பாங்களே? ரத்தம் வரும்படியா அடிச்சாங்களாமே? இப்பதான் என் மனசு நிம்மதியாச்சு. அவளுக்கு, கூடுனது தூக்குத் தண்டனை, குறைஞ்சது ஆயுள் தண்டனை... இரண்டிலே ஒண்ணு கிடைக்காமல் போகாது. ரமணன் சார் சொல்லிட்டாரு... எங்கேடா போறே?"
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...