மூணுபேருமாய் சேர்ந்து ஒரு புகார் மனு தயார் செய்யப் போறோம். இளங்கோ இங்கேயே சாப்பிடுவார். சுப்பையா சார் புறப்படலையா?"
சுப்பையா சாருக்கு போக மனமில்லை. கூடவே, ஒரு எண்ணமும் ஏற்பட்டது. மகன் அன்றிரவு போலீசிடம் சிக்கினால் எப்படியாவானோ, அப்படி அன்றிரவு அவர் மனைவியிடம் சிக்கினால் ஆவார். சிக்க விரும்பாமல், அதேசமயம் சிக்கனமாகப் பேசினார்:
"அந்த கான்ஸ்டபிள் கையில் ஏதாவது கொடுத்துட்டு வந்திடறேன். எங்க பாக்கியத்துக்கு தனியா போகத் தெரியும். தனியா போயிடுவாள். ரொம்ப தைரியசாலி.”
பாக்கியம், அவசரத்துக்குத் தோஷமில்லை என்பது போல், சுப்பையாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டே மாட்டைப் பிடித்துக் கொண்டு போவது போல் போனாள். அதை முன்பக்கம் இறுக்கப் பிடிக்க வேண்டும். இவரை பின் பக்கமிருந்து தள்ள வேண்டும். அவ்வளவுதான் வித்தியாசம் என்பது போல் அவரை நடத்தினாள்.
ரமணன் சுழற் நாற்காலியில் உட்கார்ந்து தனியாய் போகப்போன அந்தச் சின்னஞ் சிறுசுகளை தன்பக்கம் வரவழைத்தார். அந்த ஏரியாவாசிகளின் சங்கத்திற்கு, இதே ரமணன் அவர்களின் தலைவர் - தொண்டர். சந்தாகூட கொடுக்காத தெருவாசிகளுக்காக அவர்கள் வீட்டில் நடந்த திருட்டு சம்பவங்களை விளக்கும் கடிதங்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக ஒரு டிக்டேஷனைக் கொடுத்துவிட்டு, பாமாவை டைப் அடிக்கும்படி சொன்னார்.
பாமா, இளங்கோவை தனது அறைக்குள் கூட்டி வந்தாள். இயற்கைக் காட்சிகளைக் கொண்ட கட்டவுட் ஒரு பக்கம்; வீணையோடு நாதம் இசைக்கும் சரஸ்வதியின் உருவம் பொறித்த திரைச்சீலை... டூ இன் ஒன். ஒரு சின்ன டி.வி. செட். அறை முழுவதும் ஒரே சென்ட் வாசனை.
சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று கேட்கப்போன இளங்கோ, பசியை மறந்தான். தன்னையறியாமலேயே சொன்னான்:
"உங்களுக்கு கொண்டை போட்டால் நல்லாயிருக்கும். ஏன்னா உங்க முகம் ஓவல் இல்லை. அளவுக்கு மீறி ரவுண்ட். அதோட நீங்க கொஞ்சம் குள்ளம், கொஞ்சந்தான். அதனால கொண்டைய மேல்நோக்கிப் போட்டால், உங்களை உயர்த்திக் காட்டும்."