இளங்கோ உள்ளே வந்தான். பாமாவை பார்க்கும்போதெல்லம், எப்பவும் ஒரு புன்னகை சிந்துவானே, அந்த சிந்தல்கூட இல்லாமல் அங்கிருந்தவர்களை ஏறெடுத்தும் பார்க்காமல், அவர்கள் இருந்த வழியாய் நடந்து, எதிர்ப்பக்கமாய் இருந்த தனது அறைக்குள் போனான். வழக்கம் போல் அவன் உள்ளே போனதும் எரியும் பல்ப் எரியவில்லை. அவன் பீஸாகிக் கிடந்தான். பாக்கியம் ஓடோடிப் போய் லைட்டைப் போட்டாள். "கெட்டவுட், கெட்டவுட் அம்மா ஒங்களால இப்பவும் அவமானப் பட்டுட்டு வாறேன்” என்று அவன் கத்துவது கேட்டு சுப்பையா மகிழ்ச்சியோடு ஓடினார். மல்லிகா மாத நாவலோடும், பாமா தந்தையோடும் ஓடினார்கள். ரமணன் உபதேசித்தார்:
"மை டியர் யங்மேன், என்ன நடந்தாலும், அதையும் அதை நடத்தினவங்களையும் தீர்த்துக்கட்ட இந்த அங்கிள் இருக்கேன். கமான், என்ன நடந்ததுன்னு சொல்லுப்பா... அப்புறம் இந்த அங்கிள் என்ன செய்யப் போறேன்னு பாரு, கமான் மை பாய், கமான்."
இளங்கோ கண் விழித்தான். அதில் அம்மா பட்டதால், மீண்டும் மூடிக்கொண்டான். பிறகு கண்களை மெல்லத் திறந்து, அங்கிள் ரமணனை பயபக்தியோடு பார்த்தான். அவரைப் பார்க்கப் பார்க்க ஒரு நிமிர்வு ஏற்பட்டது. முன்பெல்லாம், குண்டோதரன் என்று அவரையே கேலி செய்தவன் இவன். இப்போது, அவரை தனக்கு உதவப்போகிற மிகப் பெரிய ரவுடியாக எண்ணினான். அன்று காலையிலிருந்து இரவு வரை நடந்த விவகாரங்களை அம்மாவைக் கோபமாகப் பார்த்தபடியும், பாமாவை குளுமையாகப் பார்த்தபடியும், மல்லிகாவைப் பார்க்காதபடியும் சொல்லி முடித்தான். கடைசியில், பாமா முன்னால், தனது கதாநாயகத்தனம் குறைந்துவிடாமல் இருக்க, முகத்தை நிமிர்த்தி கம்பீரமாகச் சொன்னான் :
"அவள் வழிமறிச்சவுடனே எப்படித்தான் அப்படி ஆத்திரம் வந்ததோ எனக்கே தெரியல, அவளை ஒரேத்தள்ளா கீழே தள்ளினேன். அப்புறம் அங்கே பிடிச்ச ஓட்டத்தை இங்கே வந்துதான் முடிச்சேன்.''''
அவனை கைகுலுக்கி பாராட்டப் போவதுபோல், பாமா கைகளை நீட்டினாள். அவனும் தனது கையை நீட்டுவது போல் இருந்தது. ஆனாலும் பாமா, தானாகவே வெட்கப்பட்டு, தானாகவே நீட்டிய கைகளை மடக்கிக் கொண்டு அவனை சாய்த்துப் பார்த்தாள். ஒருவர் வீட்டுக்கு ஒருவர்