வெளிப்படுவதைப் புரிந்து கொண்ட, ரமணன் சமயோசிதமாக சமாளித்தார்.
"சுப்பையா சாருக்கு எப்பவுமே ஜோக்குதான். ஒரு தாயோட மனச ஏன் புரிஞ்சுக்கத் தெரியல? எம் மனசு அவங்கள விட அதிகமாக சங்கடப்படுது. ஏன்னா, என் வீட்டு இரும்புக் கம்பிய எடுக்கிறத தடுத்தவரு எங்க போயிட்டாருன்னு தெரியலையேன்னு, ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு."
மிஸ்டர் ரமணன், தொடர்ந்தார்.
"நானும் இந்த ஏரியாவில் ஒரு கூர்க்கா போடணுமுன்னு ஒவ்வொரு வீட்டு முன்னாலயும் கரடியா கத்துறேன். யார் கேட்கிறாங்க? இப்பத்தான் இந்த நாடே குட்டிச்சுவராப் போகுது. ஓட்டுப் போடப் போகமாட்டோம். அதே சமயத்தில் அரசியலை அலசுவோம். சினிமாவுல கஷ்டப்படுகிற கேரக்டர்களுக்குக் கண்ணீர் விடுவோம், ஆனால் வாழ்க்கையில கஷ்டப்படுகிறவங்களுக்கு தண்ணி காட்டுவோம். இதுதான் நம்மோட நேஷனல் கேரெக்டர். நம்ம நேஷன்ல் கேரெக்டர் இருக்குதே... அப்படி ஏதும் இருக்குதா என்ன?”
ரமணனின் மகள் பாமா, தந்தையை வெடுக்கெனப் பார்த்தாள். சந்தனத்தையும், குங்குமத்தையும் கலந்தது மாதிரியான நிறம். அடிக்கடி பிடரி முடியை மேலே தூக்கித் தூக்கி வைப்பாள் என்பதைத் தவிர குற்றம் சொல்லும்படியாக எதுவும் கிடையாது.
“என்ன டாடி... இப்போ போய லெக்சர் அடிக்கிறீங்க! பாவம் ஆன்டி எப்படித் துடிக்கறாங்க பாருங்க. நீங்களும், அங்கிளும் அங்கே இங்கே போய் தேடுங்க.'
"ஓகே.. ஓகே... மிஸ்டர் சுப்பையா, நீங்க வரப்போறீங்களா, அல்லது இருக்கப் போறீங்களா?"
சுப்பையாவும் எழுந்தார். அறைக்குள் போய் ஒரு கோணிப்பை சட்டையை எடுத்துப் போட்டார். அகப்பட்டுக் கொண்டார் என்ற திருப்தியில் அங்கே வந்த மனைவியை விட்டு, லாவகமாக விலகி, வெளியே வந்து, மிஸ்டர் ரமணனோடு சேர்ந்து நின்றுகொண்டு, அவளை இளக்காரமாகப் பார்த்தார். மிஸ்டர் ரமணன் பூட்ஸ்களுக்குள் கால்களை சொருகப் போனபோது -