“ஏன் டாடி... பேசாமல் டெப்டி கமிஷனர் வீட்டுக்கே போயிட்டு வந்திடுங்களேன்."
“போகலாம்தான். அங்கேயும், ஏ.கே-47 துப்பாக்கியோட இருக்கிற ஒருத்தன் தடுப்பானே. டோன்ட் ஒர்ரி... நாளைக்குக் காத்தால எட்டு மணிக்குள்ள அவரை பிடிச்சுடறேன். அப்போ பி.ஏ.-வும் இருக்க மாட்டான்; எம்.ஏ.வும் இருக்க மாட்டான்; கவலைப்படாதே இளங்கோ."
"இவ்வளவு நடந்தும் எப்படி சார், கவலைப்படாம இருக்க முடியும்?"
“ரமணன் ஸார்... நீங்கதான் என் பிள்ளைய மீட்டுத்தரணும். இந்த மனுசனை நம்பிப் பிரயோசனம் இல்லை.”
"கவலைப்படாதீங்க பாக்கியம்மா. இப்படி குழந்தை மாதிரியா அழுவறது? பாருங்க உங்க டாட்டர் மல்லியை... அவளை மாதிரி கம்பீரமாக இருக்கணும்."
"ஆமாம் ஆன்ட்டி, டாடி ஏதாவது செய்யாமல் அவர நான் விடப்போறதுல்ல. ஒருவேளை நான் மட்டும் வீட்ல இருந்து, இந்தப் பொறுக்கிப் பொண்ணை நான் தடுத்திருந்தால் என்னை கொலை பண்ணிட்டு இந்த ஆறு பவுன் செயினை கழுத்தோட சேர்த்து அறுத்துட்டுப் போயிருப்பாளே. எதுக்குச் சொல்றேன்னா, இளங்கோவோட பிரச்சினை, என்னோட பிரச்சினை. அவரோட தியாகம் வீண்போகாது."
மிஸ்டர் ரமணனும், அவர் மகள் பாமாவும் எழுந்தார்கள். இளங்கோ பாமாவை சோர்வோடு பார்த்தபோது, அவளோ, 'யாமிருக்கப் பயம் ஏன்?” என்பது போல் முருக தோரணையோடு உள்ளங்கையை நிமிர்த்திக் காட்டினாள். அவர்களோடு சேர்ந்து நழுவப்போன கணவனை “எங்கே போறீங்க” என்று பாக்கியம் அதட்டினாள். அவரோ, "ஒரே இருட்டா இருக்கு. அவங்களை விட்டுட்டு வாறேன்” என்று முன்னால் நடந்தார். இனிமேல் அவள் தூங்கிய பிறகுதான் வருவார்.
இளங்கோ, சாய்வு நாற்காலியையே கட்டிலாக்கினான்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...