Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 05 - சு. சமுத்திரம்
அந்தப் போலீஸ்காரரும், இந்த இளங்கோவும், சரோசாவும் சேர்ந்தாற்போல், மாதா கோவில் வளாகத்திற்கு வெளியே வந்தார்கள்.
போலீஸ்காரருக்கும் இளங்கோவுக்கும் மத்தியில் வந்த சரோசா, தலைமுடியை விரித்துப்போட்டு, அதுவே கழுத்துக்கு ஒரு ஸ்கிரீன் மாதிரி காட்ட, அங்குமிங்குமாய் பார்த்தாள். ஒரு மேட்டில், இரண்டு பேர் சவலைக் குழந்தை மாதிரி இருந்த கரும்பை துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு அருகே கரும்புச்சாறு குவளை ஒரு மேஜையில் இருந்தது. ஈக்கள் மொய்த்து, அந்தச் சாறு தன்னை ஒரு நோய்த் திரவமாய் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது. காக்கிச் சட்டையில் மூன்று கோடுகள் போட்ட ஒரு போலீஸ்காரரும், சிவில் உடையில் சிவப்புக்கோடு சட்டை போட்டிருந்த இன்னொருவரும் கரும்புக்காரரிடம் எதையோ கிசுகிசுத்தார்கள். போலீஸ்காரர், லத்திக் கம்பை ஊன்றிக் கொண்டு கம்பீரமாக நின்றபோது, அந்தக் கரும்பு மனிதர் இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து அவரிடம் நீட்டினார். அவரோ அதை கண்ணால் பார்க்க விரும்பாதது போல் கண்களை மூடிக்கொண்டார். இதற்குள் சிவில் ஆசாமி, அந்த இரண்டு நோட்டுகளையும் பறித்துக் கொண்டு யூனிபாரம் ஆசாமியோடு, ஒரு பேன்சிக் கடையை பார்த்துப் போய்க் கொண்டிருந்தார்.
சரோசா, தன் பக்கம் நின்ற போலீஸ்காரரைப் பார்த்துக் கேட்டாள்:
“ஏன் சாரே அதோ மாமூல வாங்குறாரே, அவரை ஒன்னால அரஸ்ட் பண்ண முடிமா?"
சரோசாவின் பக்கத்தில் நின்ற போலீஸ்காரர் சற்றுத் தொலைவில் ஒரு சீப்பை எடுத்து தலைவாரியபடியே, 'சீப்பாக' நடந்து கொள்ளும் தனது போலீஸ் சகாவையே வெறித்துப் பார்த்தார். அவருக்கு, தனது யூனிபாரமே கழன்று அம்மணமாக நிற்பது போல் தோன்றியது. 'நான் அப்படிப்பட்டவன் இல்லை' என்று இவளிடம் எப்படிச் சொல்வது? இதுவரை ஒரு டீ கடையில்கூட, ஓசிடீ, குடித்ததில்லை என்பதையும், இதனாலேயே பல தண்ணி இல்லாக் காடுகளை ஓசியாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டதையும், பதவி உயர்வு பறிபோனதையும், இவளிடம் எப்படிச் சொல்வது? சரோசா, அவரது முகச் சுளிப்பைப் பார்த்துவிட்டு சமாளித்தாள்.
"அந்த போலீஸ் அண்ணாத்தைய நான் தப்பா சொன்னதா நினைக்காதே சாரே. நாங்கோளும், நீங்கோளும் தோஸ்துங்க. சாரு வேலைக்குப் புதுசோ?”