போலவும் வெளியேறினார்.
கிரைமும், லாவும் மணிக்கணக்கில் பேசப்போவது போல் சாவகாசமாகப் பேசிக் கொண்டிருந்த போது, சரோசா ஒரு பாட்டை முணுமுணுத்தபடி, அந்த அறைச்சுவரில் அப்பிக்கிடந்த துப்பாக்கிகளைப் பார்த்தாள். இளங்கோ, கடிகாரத்தையே மாறிமாறிப் பார்த்தான். இதை தற்செயலாகப் பார்த்த கிரைம் சப்-இன்ஸ்பெக்டர், “நீங்க ரெண்டு பேரும், வெளியில நில்லுங்க, கூப்பிட்டு அனுப்புறேன்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.
வெளியே வந்த இளங்கோவை, சரோசா கண்ணடித்துச் சிரித்தாள். அவன் ஒதுங்கிப் போய் ஒரு மரத்தோடு மரமாக நின்றான்.
அவளோ கீழே கிடந்த ஒரு பொடிக்கல்லை காலால் தட்டித்தட்டி, அது உருண்டு விழும் இடங்களைப் பார்த்து நிதானமாக நடந்தாள். ஒரு சமயம், அதே கல்லை காலால் இடறி அவன் கணுக்காலில் விழச் செய்தாள். இளங்கோ அப்படியும் அசையாது இருப்பதைப் பார்த்துவிட்டு, நாக்கைத் துருத்தி 'கொன்னுடுவேன்' என்பது மாதிரி கையை ஓங்கி அழகு காட்டினாள். அவன் பதிலழகுகாட்டாமல் சும்மா இருந்ததால் சலித்துப் போய் அவனைப் பார்த்து சிறிது நெருங்கி நேருக்கு நேராய் கேட்டாள்: "இந்தாப்பா, நானு இதோ அந்த கீரைக்காரம்மாவண்ட பேசிட்டு வாரேன். அதுக்குள்ள போலீஸ் கூப்டா ஒரு நட வந்து சொல்லு. பேஜாருபிடிச்ச பிள்ளாண்டாம்பா... இந்நேரம் ஒரு கிலோ இரும்பு கிடைச்சிருக்கும்."
இளங்கோ, முகத்தைத் திருப்பிக் கொண்டான். கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்த போது, அது நனைந்துவிட்டது. சரோசாவோ, அலுங்காமல் குலுங்காமல் போய்க்கொண்டிருந்தாள்.
இளங்கோ, அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே நின்றான். அரை மணி நேரம் கழித்து சரோசாவும் ஆற அமர வந்தாள். ஆடாமலே அடங்கிப்போன அவனைப் பார்த்து 'ரப்பாகச் சிரித்தாள். "இன்னுமா கூப்பிடல” என்று அவனிடமே சர்வ சாதாரணமாகக் கேட்டாள். அவனோ, அவளைப் பார்க்காமல் அடிக்கடி கீழே தொங்கிய கையைத் தூக்காமலே கடிகாரத்தை குனிந்து பார்த்தான். இப்படிப் பல 'தலைக் குனிவுகள்!"
இளங்கோ பத்துத் தடவைக்கு மேல் கடிகாரத்தைப் பார்த்துவிட்டான். ஒரு தடவைக்கு பத்து