"இல்ல, இல்ல, உனக்குத்தான் புதுசு."
அந்தப் போலீஸ்காரர் பேச்சோடு பேச்சாக, அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, அந்த வழியாய் போன ஒரு ஆட்டோ ரிக்ஷாவை கைதட்டிக் கூப்பிட்டார். அந்த ஆட்டோ டிரைவர் யானை வாயில் பட்ட கரும்பும், போலீசிடம் சிக்கிய ஆட்டோவும் ஒன்று என்பது போல் கண்டுக்காமல் ஆட்டோவை ஒடித்து முறித்து வளைத்தார். உடனே இவர் விசிலடித்தார். பயந்துபோன ஆட்டோக்காரர், பம்மிப்பம்மி வந்து ஆட்டோவை அவர் கால் அருகே, அதன் முனைப்பைக் காட்டி நிறுத்தினார். அந்தப் போலீஸ்காரர் உடனடியாய்க் கேட்டார்:
"இந்தாப்பா, பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல இவங்களை விட்டுட்டு பழையபடியும் இங்கே என்னைக் கொண்டுவந்து விடணும். எவ்வளவு கேக்கிற?"
"சார்... சார், கிண்டல் பண்ணாதீங்க சார். நீங்க கைதட்டிக் கூப்பிட்டது நிசமாவே என் காதுல விழல சார்."
போலீஸ்காரர் ஆட்டோக்காரரை கண்டுக்காமல், இளங்கோவிடம் இப்படிச் சொன்னார்:
"இந்தாங்க மிஸ்டர்! என்னோட டூட்டி உங்களை நடக்கவச்சு கூட்டிப்போறதுதான். உங்களுக்கு இஷ்டம் இருந்தால் பத்து ரூபாய் அவர்கிட்ட கொடுங்க, ஆட்டோவில் போகலாம்."
இளங்கோ தலையாட்டினான். பைக்குள் இருந்த இருபது ரூபாய் முனுசாமியின் வயிற்றுக்குள் சாராயக் கஞ்சியாகப் போனது அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனாலும், அதே ஆட்டோவில் வீட்டுக்குப் போய் பணம் கொடுத்துவிடலாம்.
அந்தப் போலீஸ்காரரும், இளங்கோவும் அக்கம்பக்கம் பார்த்தபோது, சரோசா அந்த ஆட்டோவில் ஏறி ஜம்முன்னு குந்தினாள். இதற்குள் போலீஸ்காரரும் ஆட்டோவுக்குப் பின்புறமாய் நடந்து ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு சரோசாவை ரைட் சைடில் நகரும்படி சைகை செய்துவிட்டு, இளங்கோவைப் பார்த்தார். அவன் சற்று தயங்கிவிட்டு அவர்கள் இருவருக்கும் மத்தியில் வந்து உட்காருவதற்கு யோசிப்பவன்போல் நின்றான். சரோசா