''சார் சார்! இது அக்கிரமம் சார். எனக்கு இந்த மாதிரியெல்லாம் பழக்கமில்லை சார்."
“வெயிட் மிஸ்டர் வெயிட்... ஒரு பொண்ணு மானத்துக்கு ஏற்படுகிற களங்கத்த பொதுவா சொல்ல மாட்டாள். அதையும் மீறி அவ சொல்றான்னா, அதுல ஏதாவது இருக்கணும். ஒரு சீரியஸ் சமாச்சாரத்த நான் கேக்காமல் இருக்க முடியுமா? சரோசா அப்புறம் மேற்கொண்டு சொல்லு."
இந்த இடைவெளியில் மேற்கொண்டு என்ன பேசுவது என்று யோசித்து வைத்திருந்த சரோசா, கதையை தொடரப்போன போது, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு சப்-இன்ஸ்பெக்டர், அங்கே வந்தார். நேரடி நியமனக்காரர். எல்லா கான்ஸ்டபிள்களும் அயோக்கியர்கள் என்று நினைப்பவர். அவரிடம் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சொல்வதற்கு முன்பே அவரைக் கூட்டிவரப் போனவர் சொல்லிவிட்டதால், தன்னை விட பத்து வயது பெரிய அந்தப் போலீஸ்காரரைப் பார்த்துக் கத்தினார்:
"யோவ் திருமலையப்பா! பீச்சுக்கு டூட்டிபோட்டா இங்க எதுக்குய்யா வந்தே?”
“இந்த சஸ்பெக்ட கூட்டிக்கிட்டு வந்தேன் சார்."
"உன்னை பீச்சுலதான் டூட்டி போட்டேன். நீ ஏன் ஏரியாவிட்டுப் போறே? உனக்கு எதுக்குய்யா வம்பு? இந்நேரம் பீச்சுல ஒரு லா அண்ட் ஆர்டர் பிராப்ளம் ஏற்பட்டிருந்தா யாருய்யா பொறுப்பு? ஏய்யா திமுறா பாக்கே? ஏ.சி. வரட்டும். உன்னமாதிரி ஆளுங்களை கொடுத்துட்டு சட்டம் அமைதி நல்லாயிலலன்னு சட்டம் பேசுறாரு சட்டம்."
திருமலையப்பன், அந்த சப்-இன்ஸ்பெக்டரை அடிக்கப் போவது போல் முறைத்தார். பிறகு அழப்போவது போல் பார்த்தார். கடந்த கால அனுபவங்களையும், குடும்ப நிலையையும் மனதிற்குள் வலுக்கட்டாயமாக நினைத்துக் கொண்டார். கோபம் வந்தால் பத்துவரை எண்ண வேண்டும் என்று ஒருவர் சொல்லிக்கொடுத்தபடி மனதிற்குள் எண்ணினார். எண்ணியதை இடையில் விட்டார். பிறகு அவர்களுக்கு விறைப்பாக ஒரு சல்யூட் அடிக்கும் சாக்கில், வலது புறங்கையால் கண்களைக் துடைத்துவிட்டு, வேகப்பட்டவர் போலவும், பாவப்பட்டவர்