Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 04 - சு. சமுத்திரம்
பல்லவ பஸ்களின் முன்னால் விழப்போகிறவன்போல் குவிந்து நடந்து, மல்லாக்கச் சாயப்போகிறவன் போல் வளைந்து நடந்து, இளங்கோ எங்கெல்லாமோ நடந்தான். இறுதியில் தனக்கே தெரியாமல் கடற்கரை மண்ணில் கால் வைத்தான்.
இளங்கோ, அலையடித்த கடல் நீர் முன்னால் நின்றான். பிறகு, அங்கே உட்கார்ந்தபடி, கைகள் இரண்டையும் பின்னால் ஊன்றி, கால்களை அலை படும்படி முன்னால் நீட்டிக் கொண்டு பின்பக்கமாய் சாய்ந்தான்.
"இன்னா சாமி, ஆகாயம் இடிஞ்சுட்டா? பூமி நொறுங்கிட்டா? ஏன் இப்படி கீற? ஆமா... நான் கேள்விப்பட்டது நிசமா? ஒரு அறியாத பொண்ணு உன்ன கைவெச்சுட்டாளாமே?”
இளங்கோ, ஒரு பக்கமாய் திரும்பி, முனுசாமியைப் பார்த்தான். அவனுக்கு முப்பது வயதிருக்கும். அய்ம்பது வயதைக்காட்டும் ஒடிந்த குரல்; குச்சி மாதிரியான உடம்பு. இடுக்கிப் பார்க்கும் கண்கள்... இளங்கோ பக்கத்தில் அவன் உட்கார்ந்தான்.
"இன்னா சாமி! இன்னா நடந்தது சாமி? நான் இப்ப இன்னா செய்யணும்னு சொல்லு. அவள் தலையை வெட்டி ஒன் காலுல வைக்கணுமா? வெட்டிட்டு வான்னு சொல்லு, கட்டிட்டு வரேன்."
இளங்கோ, முனுசாமியை தெய்வத்தைப் பார்ப்பதுபோல் பார்த்தான். அவன் தோளிலே கைபோட்டான். மனதில் இருந்ததை கொட்டிப் போட்டான்.
"முனுசாமி! முனுசாமி! அவளை எப்படியும் பழிக்குப் பழி வாங்கியாகணும்; அப்பதான் எங்கம்மா மனசு குளுரும். என் மனது ஆறும்."
"கவலைய விடு சாரே, அத என் பொறுப்புல விடு. அவள் இருக்குற இடமும் எனிக்கி தெரியும்.
"தெரியுமுன்னா காட்டு. அவள் கழுத்த வெட்டி அம்மா காலுல வைக்கணும்."
“அப்படிச் சொல்லாத சார், போலீஸ் எதுக்கு இருக்கு? அவங்ககிட்ட ஒப்படைக்கணும்.”