பையனாகக்கூட இருக்கலாம். எதுக்கு வம்பு, அவர்? அவன், தோளில் தோழமையோடு கை போட்டு "அவளை காட்டுங்க சார்" என்று கூட்டிப் போனார்.
இருவரும் போய் அந்தப் பிச்சைக்காரப் பகுதியில் நின்றனர். அவள், கையில் இன்னும் இருந்த அந்த மிச்ச மீதிப் பன்னை, பிய்த்துப் பிய்த்து அவருக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.
இளங்கோ, போலீஸ்காரரை அவசரப்படுத்தினான். அவர் தனது விருப்பத்திற்கு விரோதமாகவே அவளை லத்திக் கம்பால் தட்டி ஆணையிட்டார்:
"ஏய்... எழுந்திரு, ஒன் பேரென்ன?"
நைனாவின் கையிலிருந்து விடுபட்டு, தலை நிமிர்ந்த சரோசா, அந்தப் புதிய போலீஸ்காரரைப் பார்த்துச் சிரித்தாள். பிறகு, “பேருக்கு ஏற்றபடிதான் அரஸ்ட் பண்ணுவீங்களா” என்று கேட்டாள். போலீஸ்காரருக்கு இப்போது கோபம் வந்ததது. லத்திக் கம்பை ஓங்கியபடி நின்றார். அவள் எழுந்தாள்; அப்போதுதான், இளங்கோவைப் பார்த்தாள். அவனை ஏற, இறங்கப் பார்த்துவிட்டு, "இந்த கேஸ் யாரு சாரே, இதுகூட சேர்ந்து நான் எந்த தப்புத் தண்டாவும் செய்யலயே. இது பிளேடா, இல்ல பிச்சுவாவா" என்றாள்.
இளங்கோ கோபப்படுவதற்கு முன்பே போலீஸ்காரர் பல்லைக் கடித்தார்.
"இந்தாம்மா! மரியாதையா ஸ்டேஷனுக்கு நட. நான் மனுஷனா இருக்கிறது உன் பொறுப்பு."
சுவரில் சாய்ந்து கிடந்த அந்தக் கிழவர், தட்டுத்தடுமாறி எழப்போனார். பிறகு விழப் போனார். பின்னர், கை எழும்பியது போல் கால் எழும்பாத நிலையில், கண்ணுக்குத் தெரியாத அந்த போலீஸ்காரருக்கு ஒரு கும்பிடு போட்டபடியே, குழைந்தார்.
"போன மாசம்தானே, உங்க ஆளுங்க ஒரு கேசுக்காக கூப்பிட்டாங்க, இவளும் அவங்களுக்காக, செய்யாத தப்ப செய்ததா சொல்லி அபராதம் கட்டினாள். இது தாங்காது சாமி." "எது செய்தாலும் சட்டப்படிதான் செய்வோம் பெரியவரே. உம், நடம்மா."
சரோசா, இளங்கோவிற்கும் அந்தப் போலீஸ்காரருக்கும் இடையே கம்பீரமாய் நின்றாள்.