"நீ வேற. போலீஸ் காலுல விழறத விட, அவள் காலுலயே விழுந்திடலாம்."
"சும்மா சொதப்பாத சாரே... போலீஸ்காரங்களுக்கு வெள்ளைச் சட்டகாரங்கன்னா, ஒதறல்; எப்பவுமே போலீஸ் காரங்ககிட்ட உத்தரவு போடற மாதிரி நீ பேசணும். படிச்சவன் அப்படிப் பேசினா, அவனுக பல்லக் காட்டுவானுக. என்ன மாதிரி எளியவங்க பேசினா பல்ல ஓடைப்பாங்க."
"சரி அவங்க கிடக்கட்டும், இப்போ அவள எப்படி பழிக்குப்பழி வாங்குறது? எழுந்திரு அவள பிடிக்கப் போகலாம்.''
“போகலாம்தான்... ஆனா அதுல ஒரு சிக்கலு. ஆமா சாரே... அவளோ, கள்ளச்சாராயக்காரி. சாராயம் குடிக்கிற சாக்குலதான் அவகிட்ட போக முடியும். ஒரு டம்ளர் ‘கஞ்சி” மூணு ரூபா. மூணு டம்ளர் போட்டாத்தான் பேசறது பத்தி யோசிப்பா.'
“கஞ்சின்னா என்னப்பா?”
"அதெல்லாம் நீ கண்டுக்கப்படாது. அது சல்பேட்டா சாராயத்துலேயே ஒரு தனி ரகம். மூணு டம்ளர் 15 ரூபா. இன்னா சொல்றே?''
இளங்கோ, பைக்குள் இருந்த ஒரேயொரு இருபது ரூபாய் நோட்டை முனுசாமியின் இடுப்புக்குள் செருகி விட்டு, அவனைப் போகும்படி தள்ளி விட்டான். முனுசாமி அவனுக்குப் பிரியாவிடை கொடுப்பவன் போல் போனான்.
முனுசாமி, அந்த மாதா கோவில் ஆலய வளாகத்திற்குள் போவதை, இளங்கோ தொலைவில் நின்று பார்த்தான். ஐந்து நிமிட அவகாசத்திற்குப் பிறகு அங்கே நெருங்கி நெருங்கிப் போனான். அந்த வளாக வாசல் பகுதிக்குள் ஒரு ஓரமாய் நின்றபடி உள்ளே அவன் எட்டிப் பார்த்தபோது-
அந்த வளாகத்தின் கிழக்குப் பகுதியில் மாதா கோவில்; மேரி மாதா குழந்தை ஏசுவோடு, புன்முறுவலோடு நிற்கிறாள். வருத்தப்பட்டு பாரம் சுமக்காதவர்கள், பட்டுப் புடவைகளோடும்,