ஆண்டுகளைக் கூட்டிவிட்டதைக் காட்டுவது போல் கால்கள் கைகளைப் போலவே இருந்தன. முகத்துக்கும், மார்புக்கும் இடைவெளி தெரியவில்லை. கூனிக்குறுகி கண் இழந்தவர்போல் அங்குமிங்குமாய் கைகளைத் துழாவிய அவர் வாயில், அவள் டீயை ஊற்றினாள். பிறகு கையில் இருந்த ஒரு ‘பன்னை’ பிய்த்துப் பிய்த்து தேநீரில் தோய்த்துத் தோய்த்து, ஈரம் சொட்டச் சொட்ட அவரது வாய்க்குள் திணித்தாள். சற்றுத் தொலைவில் 'தாயப்பாஸ்' ஆடிக்கொண்டிருந்த அவளது தோஸ்துகள் - "இன்னாமே யாரோ ஒருத்தன அடிச்சுப் போட்டுட்டு வந்தியாமே, அந்த பொட்டப்பயல் ஒன்னை திருப்பி அடிக்கலியா?” என்றனர்.
வாசல் பக்கம் பட்டும் படாமலும் பார்த்துக் கொண்டு நின்ற இளங்கோவிற்கு, தன்னை ஆண் பயல் என்று நிரூபிக்க வேண்டும். போல் இருந்தது. மீண்டும் ரோஷம் வந்தது. அதற்கு வடிகாலாக, அந்தச் சமயம் பார்த்து அந்தப் பக்கமாய் ஒரு போலீஸ்காரர் வந்தார். அவனுக்கு ஏற்றாற் போல் மணி கேட்டார். அவன் “ஐந்து நாற்பது" என்று சொல்லிவிட்டு, பேச்சை ஆரம்பித்தான். முனுசாமி சொன்னது போல் சற்று ஆணித்தரமாகப் பேசினான்.
"சார், இதுக்குள்ளே ஒரு கிரிமினல் இருக்காள்... எங்கம்மாவை கொலை செய்ய ‘அட்டம்ட்' செய்தவள். எதிர் வீட்டுக்குள் போய் எதையோ திருடியிருக்காள். தட்டிக்கேட்ட என் 'மதரின்' காலை உடைச்சிருக்காள். ஐ.ஏ.எஸ். அதிகாரிங்க அதிகமாக இருக்கிற எங்க ஏரியாவிலேயே பிரிட்ஜ், டி.வி. காணாமல் போகுது. ஒரு ஆறு வயகப் பையன்க்கூட காணல. இவளே இதுக்குக் காரணமுன்னு நினைக்கிறேன். நீங்க இப்போ இவள பிடிச்சு ஸ்டேஷனுக்குக் கொண்டு போகணும்."
"நான் 'பீட்டுக்கு' வந்திருக்கேன். எல் அண்ட் ஓ கவனிக்கிறவன்; அதாவது சட்டம் - ஒழுங்கை கவனிக்கிறதுதான் என் வேல. இது கிரைம்; அதனாலதான் யோசிக்கிறேன்."
"ஒரு குற்றவாளி கண்ணில் படும்போது பொதுமக்களில் ஒருத்தர்கூட போலீசில் சொல்லாட்டால், அதுவே குற்றமுன்னு சட்டம் சொல்லுது. நீங்க ஒரு போலீஸ்காரர், அப்புறம் உங்க இஷ்டம்.”
அந்த கான்ஸ்டபிள் யோசித்தார். இவன் முகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குரிய களையோ அல்லது திமிரோ இல்லை. ஆனாலும் இவன் அப்படிப்பட்ட ஒரு ஐ.ஏ.எஸ்.ஸின் ஒரு அசட்டுப்