கழுத்துத் தாங்க முடியாத நகைகளோடும், சபாரி உடைகளோடும் போய்க் கொண்டிருக்கிறார்கள். காரிலிருந்து இறங்கிய கண்ணியவான்கள் மனைவிகளை கரம் கோத்து நடந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வளாகத்தின் இன்னொரு பகுதி; கல்லும் மண்ணும் கொண்ட கட்டாந்தரை. அங்கே மரித்தெழுந்தது போல், எழுந்த சுவரோடு சுவராக பல்வேறு வகை பிச்சைக்காரர்கள் மண்டியிட்டும், சம்மணம் போட்டும், குத்துக்காலிட்டும், அப்படிப் போடுவதற்கு முழுக்கால்கள் இல்லாமலும் கிடந்தார்கள். ஒவ்வொருத்தர் முன்னால் ஏதோ ஒரு துண்டு, ஏதோ ஒரு தட்டு.
சொர்க்கமும், நரகமும் அருகருகே இருப்பது போன்ற அந்த வளாகத்திற்குள் எட்டிப் பார்த்த இளங்கோ, வறுமையும், வெறுமையும் கூடி கோர தாண்டவம் ஆடும் அந்தக் கட்டாந்தரைப் பகுதியை உற்றுப் பார்த்தான்.
திடீரென்று பார்த்துப் பார்த்துப் பூத்துப்போன அவன் கண்கள் பிரகாசித்தன. சுரக்காய் குடுக்கைபோல் ஒடுங்கிய சந்திற்கு அப்பால், தென்பட்ட குடிசைப் பகுதியிலிருந்து, முனுசாமி தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தான். அவனைப் பிடித்தபடியும், அதேசமயம் அவன் தன்மேல் விழும்போது தள்ளியபடியும், சரோசா வந்து கொண்டிருந்தாள். அவள் இடுப்பில் ஒரு சுருக்குப் பை தொங்கியது. அதிலிருந்த ரூபாய் நோட்டுகளை எண்ணியபடியே முனுசாமியை நடத்திக் கொண்டிருந்தாள். அவன் தடுமாறி தரையில் விழுந்தபோது, அவனை அங்கேயே போட்டுவிட்டு வெளியே வந்தாள். இளங்கோ ஒதுங்கிக் கொண்டான்.
சரோசா, பஸ் நிலையப் பின்பக்கத்து மதில்மேல் இருந்த ஒரு டீக்கடையில் இரண்டு பன்களை வாங்கி ஒரு கையில் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் ஒரு கப் டீ டம்ளரை ஏந்திக்கொண்டு திரும்பிப் போனாள். இளங்கோ சுவரில் முகம் போட்டு அவளுக்கு முதுகு காட்டினான். ஏதோ ஒரு பயம், ஏதோ ஒரு உதறல்; அவனுக்கே அவன் போக்கு வெட்கமாக இருந்தது.
இதற்குள், சரோசா அவன் இருப்பது தெரியாமல், அந்த வளாகத்திற்குள் நடந்தாள். அந்த கட்டாந்தரைப் பகுதிக்குப்போய் அந்த வெயிலிலும் கம்பளியால் மூடி, அப்படியும் குளிர் தாங்க முடியாமல் ஆடிக்கொண்டிருந்த ஒரு முதியவரின் முன் குத்துக்காலிட்டாள். அவருக்கு பிறப்பினால், எழுபது வயதென்றால், வறுமையோ அல்லது வெறுமையோ மேலும் இருபது