"விபரமாத்தான் சொல்வேன்."
சரோசா கதை கதையாய் சொல்லிக் கொண்டிருந்தாள். இளங்கோவிற்கு கால்கள் வேர்த்தன. கைகள் நடுங்கின. இதற்குள் அவர்களைக் கூட்டி வந்த போலீஸ்காரர் அவசர அவசரமாய் இடை மறித்துப் பேசினார் :
"சார், இந்தப் பொண்ணு, இவரோட அம்மாவ அடிச்சப் போட்டுட்டு வந்திருக்கா. என்னல்லாமோ திருடியிருக்கிறாள். இவரோட ஏரியாவில், ஒரு குழந்தையக்கூடக் காணுமாம். நிறைய காஸ்ட்லி அயிட்டம், திருட்டுப் போயிருக்காம். இந்தப் பொண்ணு இன்னிக்கி அந்த ஏரியாவில அடாவடியா நடந்ததால், இதை சஸ்பெக்ட்டா கூட்டி வந்திருக்கேன்."
"நீ லா அண்ட் ஆர்டர்செக்ஷன்... இது கிரைம், எல் அண்ட் ஓ-விற்கும், இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?"
"இருக்கு சார், சம்பந்தம் இருக்கு சார். இவரோட ஏரியாவில போகிற திருட்டுக்களை நாம் சீரியஸ்ஸா எடுக்கலைன்னு, இவங்க ஏரியாக்காரங்க, நம்ம போலீஸ் ஸ்டேஷன் முன்னால மறியல் செய்தால் அது லா அண்ட் ஆர்டர்தானே. அப்படியாகாமல் தடுக்கத்தான், இப்பவே ஆக்ஷன் எடுத்தேன்."
"ஓஹோ... மூக்கை பிடறி வழியாத் தொடுறியா? இந்தாப்பா ராமசாமி, எல் அண்ட் ஓ சப்-இன்ஸ்பெக்டர நான் கேட்டுக்கிட்டதாச் சொல்லி கொஞ்சம் கூட்டிக்கிட்டு வா! ஏன் சரோசா, உன்னால கலாட்டா பண்ணாம இருக்க முடியாதா? என்ன இதெல்லாம்?"
"பெரிசா ஒண்ணுமில்ல சாரே, இந்தப் பிள்ளாண்டான், நாலு நாளா ஏன் பின்னாடியே சுத்திக்கினு கீறான். நானும் கண்டுக்கல. இவன் ஏரியா பக்கம் கிருஷ்ணாயில் வாங்கப் போனேன். இவன் இன்னாடான்னாஸைட் அடிக்கிறான். நான் கண்டபடி திட்டுனேன். போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கப்போறதா கத்துனேன். அதுக்காங்காட்டியும் இவன் முந்திக்கிறான். அய்ய... இந்த ஆட்டோவில் இவன் என்ன படுத்தின ரோதன இருக்கே, அத சொல்றதுக்கே வெக்காமாகீது சாரே."