அதட்டினாள்:
"யோவ் உன் பேரு இன்னாயா?"
"இளங்கோ."
"பேருல மட்டும் கொறச்சல் இல்ல. சீக்கிரமா வந்து குந்தேன்யா. உன்ன மாதிரி நான் என்ன வேலை வெட்டி இல்லாதவளா? நானு ரொம்ப பிஸி.”
இளங்கோ, அவர்கள் இருவருக்கும் மத்தியில் உட்கார்ந்து கொண்டான். பிறகுதான், அவள் கேட்டதற்கு தன் பெயரைச் சொல்லி ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவன் மாதிரி நடந்து கொண்டதற்கு அவமானப்பட்டவன் போல் முகத்தை உம்மணா மூஞ்சியாக்கினான். பெற்றெடுத்த அம்மா மீது பயங்கரமான கோபம். ‘அதட்டி அதட்டியே என்ன ஆம்பளையா இல்லாம செஞ்சுட்டாங்க.
ஆட்டோ, பாய்ந்து பறந்தது. இடையிலே ஒரு சைக்கிள். ஆட்டோ டிரைவர் போலீஸ் தைரியத்தில் கத்தினார்:
"ஏண்டா சோமாறி! பொறுக்கி! பொறம்போக்கு! இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடா? போலீஸ் சார் இருக்காரேன்னு பார்க்கிகேன்.''
கிடாமீசை சைக்கிள்காரர், சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு, ஆட்டோ டிரைவரை அடிப்பதற்காக லுங்கியை இறுக்கிக் கட்டப் போனார். பிறகு போலீஸ்காரர் அங்கு இருப்பதைப் பார்த்துவிட்டு, இறுக்கிய லுங்கியை அவிழ்த்துப் போட்டு விட்டு, ஏதோ அது தற்செயலாக அவிழ்ந்தது போலவும், அதை அவர் கட்டுவதற்காகத்தான் சைக்கிளை நிறுத்தியது போலவும், பாவலா செய்தார். உடனே ஆட்டோ டிரைவர் “இந்த ஆட்டோவுக்கு முதல் எதிரியே சைக்கிள்தான்” என்றார். சரோசா கத்தினாள்:
"யோவ் இளங்கோ, ஏன்யா என்மேல இப்படி ஒட்டிக்கிறே? நீ எப்பவுமே பொம்மனாட்டி பக்கத்துல குந்துனது இல்லியா? சார், 'இதை' ஒத்தியிருக்கச் சொல்லுங்கோ. கைய எங்கெல்லாமோ கொண்டு வருது."