கொடுத்துவிட்டார்கள். இதனால், பொது மக்களைத் தவிர எல்லோருக்கும் லாபம். மடக்கிப் போட்டவர்களுக்கு கிரௌண்டுக்கு மூன்று லட்சம் என்றால், முடக்கப் போனவர்களுக்கும் மூன்று லட்சம். ஆகையால் இந்தப் பகுதியை 'வேலியே பயிரை மேய்ந்த நகர்' என்று சொல்லலாம். இங்கே துவக்கத்தில் குடியிருக்க வந்தவர்கள், அடிப்படை வசதிகளை அரசிடம் கேட்பதற்காக, ஒரு சங்கத்தை வைத்தார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்ததால், வேலை வெட்டி இல்லாத மிஸ்டர் ரமணன், தன்னைத் தானே தலைவராகப் பிரகடனப் படுத்த முடிந்ததது. அடிப்படை வசதிகள் கிடைத்ததும், ரமணனும், அந்தச் சங்கத்தின் லெட்டர் பேடுமே மிஞ்சின. ரமணன் மட்டுமே சந்தா கட்டுகிறார்.
ஆனால், இன்றைக்குப் பார்த்து ரமணனுக்கு மௌக வந்துவிட்டது. 'திடீர் நகர்' மாதிரி, அவரும் திடீர் பிரமுகர் ஆகிவிட்டார். காவல் நிலையத்தில் சரோசாவுக்கு அடிவாங்கிக் கொடுத்து விட்டு, அலுவலகம் போனதும், தமிழ்த்தாய் நகர் மாமிகள் ஒவ்வொருவருக்கும் டெலிபோன் செய்தார். கொலைகாரியான சரோசாவை, போலீசார், விரைவில் விடுதலை செய்துவிடுவார்கள் என்றும், அப்படி அவள் வெளியே வந்தால், ஒவ்வொருத்தியின் குழந்தையும் கடத்தப்படும் என்றும் எச்சரித்தார். "ஒங்க பையன் ரகு, நாளைக்கு உயிரோடு இருப்பான் என்கிறது நிச்சயமில்லை” என்று ஒவ்வொரு வீட்டிலும், அந்த வீட்டுக் குழந்தையின் பெயரைச் சொல்லி அபாயம் சொன்னார். இந்த நிலைமையைத் தடுக்க வேண்டும் என்றால், த.வ.ந.ச. வின் அவசரக் கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் கையெழுத்தோடு ஒரு மனு போலீஸ் கமிஷனருக்குப் போகவேண்டும் என்றார். உடனே, தாய்மார்களும், அலுவலகங்களில் இருந்த தத்தம் கணவர்களைப் பயப்படுத்தியும், பயமுறுத்தியும், அவசரக் கூட்டத்திற்கு இணங்க வைத்தார்கள்.
கூட்டம் ஆரம்பமாகப் போனது. அப்போது ஒருத்தர், ஒரு கேள்வியைக் கேட்டார்:
"என் வீட்டுலேயும், இன்னொருத்தர் வீட்டுலேயும் ஜன்னலுக்கு மேலே கொக்கி வச்ச கம்புங்க சாத்தப்பட்டு இருக்கு... காரணம் தெரியுமா?"
“ஆபீஸ்லே தான் குழப்படி செய்யுறீங்க; இங்கேயுமா? சஸ்பென்ஸ் எதுக்கு?"
"சொல்றேன் சார். முன்னால திருட்டுப் பசங்க வந்து ஏதாவது ஒரு கம்ப எடுத்து ஜன்னலுக்குள்ளே விட்டு, துணிமணிகளை எடுத்துட்டுப் போவாங்க. இதைப் பக்கத்து