பல குற்றங்கள் நடப்பதாகவும், அதற்கு அந்த ஏரியா போலீஸ் உடன்போகிறது என்றும், ஆகையால், சரோசா நடத்திய கொலையை போலீஸ் கமிஷனரின் கிரைம் பிராஞ்ச் விசாரிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் வற்புறுத்தியது. அதுவரைக்கும் சரோசாவை ஜாமீனில் வெளிவர முடியாத குண்டர்கள் தடுப்புச் சட்டத்தில் சிறையில் போட வேண்டும் என்றும் தீர்மானம் வற்புறுத்தியது. எல்லோரும் கைதட்டினார்கள்.
அந்தச் சமயத்தில், இளங்கோவையும், சுப்பையாவையும் 'தள்ளிக் கொண்டு' பாக்கியம் வந்தாள்.
சுப்பையாவை கூட்டிக்கொண்டு வந்தது பாக்கியத்துக்கு ரோதனையாய் போயிற்று. சுப்பையா கர்ஜித்தார்:
"பெரிசாய் தீர்மானம் போட்டுட்டிங்க. அந்த ரவுடிப் பொண்ணு உள்ளே போயிட்டா, என் பையன் வெளியிலே இருக்க முடியுமா? அப்புறம், நான் பிள்ளைக்கு எங்கேய்யா போவேன்? இவனுக்கு பூனைப்படை பாதுகாப்புக் கொடுத்தாலும், சேரி ரவுடிங்க இவனை விட்டு வைப்பாங்களா? வேணுமுன்னா பாருங்க... இங்கே வந்த சோடா பாட்டில் அடிக்கப் போறாங்க. உங்க கண்ணுலே அது விழுந்து ஆஸ்பத்திரியிலே இருக்கப் போறீங்க. என் வாக்குத் தப்பாது."
பாக்கியம்கூட பயந்து போய், கணவனைப் பயமுறுத்துவதை விட்டு விட்டாள். எல்லோரும் அப்போதே கண்ணுக்குள் சோடா பாட்டில் விழுந்த மாதிரி கண்களை மூடிக்கொண்டார்கள். சில பெண்கள் தத்தம் கணவன்மார்களை வீட்டிற்குக் கூப்பிட்டார்கள். இந்த நடுத்தர வர்க்கம் இப்படி அல்லாடிக் கொண்டிருந்தபோது...
பூக்காரி ருக்குமணி மேலே வந்தாள். கையிலே ஒரு வட்டக்கூடை. அதற்குள் பல்வேறு வகைப் பூக்கள், பாம்புகள் மாதிரி சுருண்டு கிடந்தன. கையில் கனகாம்பரப் பூச்சரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒவ்வொருத்திக்கும் பூ அளந்தபடியே வாய் அளந்தாள். முப்பது வயதுக்காரி. முழுசான அழகு.
"போங்கம்மா... ஆட்டோக்காரனுக்குப் பயந்து அஞ்சு ரூபாய் அதிகமா கொடுப்பீங்க; ஆனால் பூக்காரிக்கிட்ட போய், அஞ்சு பைசாவுக்கு பேரம் பேசுவீங்க.”
ருக்குமணி, அந்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு, ஒரு பாவாடை, தாவணியிடம் விளக்கம்