கேட்டாள். அவள் சொன்னதை உள் வாங்கிக் கொண்டு, அந்தக் கூட்டத்தை வாக்காளர்களாக நினைத்து, வாதிட்டாள்:
"ஏன் சாரே... தெரியாமத்தான் கேக்கேன்... என் கொழந்த, நான் பெத்த ஒரே கஸ்மாலம் காணாமப் பூட்டான்னு சொன்னேன். காது கொடுத்துக் கேட்டீங்களா? நானும் இந்த ஏரியாக்காரிதானே? என் பிள்ளாண்டானுக்கு இப்படி ஒரு கூட்டம் போட்டீங்களா? ஏதோ பிசாத்து இரும்பும், பன்னாட கம்பியும், என் கொயந்தைய விட உங்களுக்குப் பெரிசாப் போச்சா? அதோ, பெரிசா பேசுறாங்களே பாக்கியம் அம்மா, அவங்ககிட்டே கொயந்தய காணலேன்னு அழுதேன்.என் வீட்டில ஒப்பாரி வைக்காதேன்னாங்க. அதோ தலவரு, ரமணன் சாரு, அவர்கிட்டே பஸ் ஸ்டாண்டுலே வச்சு சொன்னேன். அவர் என்னடான்னா... 'பஸ் வருது, அப்புறம் பேசிக்கலாமுன்னார். இப்படி நாறிப்போன உங்க ஏரியாவை இன்னும் பூவாலேயே மணக்க வைக்கேன்."
விஜிலென்ஸ் ஆபீசர், ரமணனின் காதைக் கடித்தார். அவளை வைத்து, போலீஸ் கமிஷனருக்கு ஒரு கடிதம் எழுதச் செய்ய வேண்டும் என்றார். சரோசா தன் வீட்டிற்கு அடிக்கடி வருபவள் என்றும், அவள்தான், குழந்தையை கடத்தியிருக்க வேண்டும் என்றும் எழுதி, கையெழுத்துப் போடச்சொல்ல வேண்டும் என்றார். இந்த விஜிலென்ஸ் ஆபீஸர், சங்கத்தின் தலைமைப் பதவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்பதற்காக, ரமணன் எழுந்தார். ருக்குமணியை நெருங்கினார். அவள் கோபத்தோடு நின்றபோது, அவள் கையை பட்டும் படாமலும் பிடித்துக் கொண்டே ஏதோ காதுக்குள் கிசுகிசுத்தார். அவள், அங்குமிங்குமாய் தலையை ஆட்டி, கத்தப்போன போது, ரமணன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு, படி இறங்கினார்.
இளங்கோவிற்கு ஏதோ ஒன்று பட்டது. தற்செயலாய் எழுவது போல் எழுந்து சுவர் பக்கம் போய், கீழே எட்டிப் பார்த்தான். அங்கே, மிஸ்டர் ரமணன், அவளுக்கு ஒரு தட்டில் கேசரியை நீட்டிக் கொண்டே காதுக்குள் கிசுகிசுத்தார். அவளோ அந்தத் தட்டை வாங்கித் தரையில் வைத்து விட்டுக் கத்தப் போனாள். பிறகு, அவரை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே அந்த வீட்டை விட்டு வெளியேறினாள். பூப்போல நடப்பவள் பூகம்பமாய் நடந்து கொண்டிருந்தாள்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...