வீட்டுக்காரங்க கண்டுக்கலை... இதனாலே, இப்ப திருடங்க எந்தச் சமயத்திலே வேணுமுன்னாலும், திருடறதுக்கு வசதியாய், ஜன்னலுக்கு மேலே கம்பயே சாத்திட்டுப் போறாங்க. என்னய்யா நகர்... அதுவும் தமிழ்த்தாய் நகரு?'
கம்புக்காரர், கூட்டத்திடம் பதிலை எதிர்பார்த்தபோது, ஒரு ஆடிட்டர் - வம்புக்காரர் - ஒரு பிரச்சினையைக் கிளப்பினார்.
"சங்கம் ஆரம்பிச்சு, பதினைந்து வருஷமாச்சு; ஆனால் தலைவர் ரமணன் கணக்குக் காட்டல."
ரமணன் பொங்கி எழுந்தார்: "நான் ராஜினாமா செய்யப் போறேன்; என்னோட தியாகம் வீணாயிட்டு."
"கூடாது. ஒங்களையும், த.வ.ந.சவையும் யாராலும் பிரிக்க முடியாது. ராஜினாமா செய்யப்படாது. நம்முடைய அரசியல் பாரம்பரியம் மாதிரி, சாகிற வரைக்கும் நீங்கதான் தலைவர்.”
"அப்போ, சங்கம்தான் முதலில் சாகும்."
"நீங்க படிச்சவங்ளா... ஆபீஸருங்களா? உங்களுக்கும், சினிமா தியேட்டர்லே விசில் அடிக்கிறவங்களுக்கும் என்னய்யா வித்தியாசம்?"
கடையில் சொன்னவர், வேறு உறுப்பினராக இருந்திருந்தால், அவரை உப்பு வைத்து ஊறவைத்திருப்பார்கள். ஆனால், சொன்னவர், போலீஸ் விஜிலென்ஸ் ஆபீஸர்; அதிகாரிகளின் ஊழல்களைக் கண்டுபிடிக்கும் பூதக் கண்ணாடி. அவரைப் பூதமாக நினைத்து எல்லோரும் வாயை மூடிக்கொண்ட போதும், அவர் அதட்டினார்:
"மிஸ்டர் ரமணன்! தீர்மானத்தைப் படியுங்க.”
உயிரோடு சமாதி கட்டப்பட்டது போல், தலைவர் நாற்காலியில் உட்கார வைத்துக் கொண்டே, தனது பதவியைப் பறித்த அந்த விஜிலென்ஸ் அதிகாரியை வேண்டா வெறுப்பாய் பார்த்துக் கொண்டே, ரமணன் தீர்மான நகலைப் படித்தார். தமிழ்த்தாய் நகரில், கொலைக் குற்றம் உட்பட