இது. ஒருவன் பசிக்கு ஒரு சின்ன கோழி அல்லது அரைக்கால் ஆடு போதும். ஆனால் ஒரு பட்டுச் சேலைக்கு ஆயிரக்கணக்கான பட்டுப் பூச்சிகளைக் கொதிக்கும் வெந்நீரில் இட்டு வதைத்துக் கொல்ல வேண்டும். நான் கண்ணாரப் பார்த்தேன். அந்தக் கொடுமையை!" என்றார் பாக்கியம்.
உடனே அம்மா, "மெய்தான். ஆனால் பட்டுச் சேலைக்குப் போடும் காசு பழுது அல்ல. நன்றாக உழைக்கிறது. அழகாகவும் இருக்கிறது" என்றார்.
"என்ன இருந்தாலும், ஆடம்பரத்துக்காக, அழகுக்காகச் செய்யும் கொலை அது! மூட்டைப் பூச்சிகளை, கொசுக்களை, எலிகளைக் கொல்கிறோம். அவைகள் நம் வாழ்வுக்கு இடையூறு செய்கின்றன. அதனால் கொல்கிறோம். புலி சிங்கங்களையும் அப்படியே வேட்டையாடிக் கொல்கிறோம். ஆனால், ஆடம்பரத்துக்காக அழகுக்காகக் கொலை செய்யலாமா? அது அறமா?" என்றார் பாக்கியம்.
அவ்வளவு தெளிவாக அவர் சொன்னதைக் கேட்டதும் இனிப் பட்டாடையே உடுப்பதில்லை என்ற உறுதி என் நெஞ்சில் ஏற்பட்டது. அந்த உறுதி இன்று வரையில் தளராமல் இருக்கிறது. அப்படி இருப்பதால், அன்று இரவு, பாக்கியம் பேசிய பேச்சும் இன்னும் என் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
"என் வீட்டுக்காரர் இதற்குமேலே ஒரு படிபோய் விட்டார்" என்றாள் தங்கை.
"எப்படி" என்றாள் மனைவி.
"தோட்டத்தில் ரோசாச் செடி பூத்திருக்கும். நான் போய்ப் பறிக்கும்போது அவர் பார்த்துவிட்டால், 'அய்யோ பாவம்' என்பார். ஒருநாள் வெள்ளிக்கிழமை பூசைக்காக அரளிப் பூக்களைப் பறித்து ஒரு தட்டில் கொண்டுவந்தேன். அவைகளைத் தட்டோடு வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு இரக்கத்தோடு பார்த்து, 'மனிதர் கையில் அகப்பட்டுக் கொண்டீர்களா?' என்றார்."
இதைக் கேட்டதும் பாக்கியம், "நல்ல மனம்தான். தாயுமானவரும் ஒரு பாட்டில் இப்படி உணர்ந்து பாடி இருக்கிறார். நவசக்தி இதழில் பார்த்தேன். காந்தியடிகளின் ஆசிரமத்தில், யாரும் அங்குள்ள பூக்களைப் பறிக்கக்கூடாது என்று ஒரு விதி உண்டாம். ஜெர்மனி நாட்டு