என்ற இரு நூல்கள் பார்த்தேன். அவற்றிலும் சில பகுதிகள் கோடிட்டிருந்தன. செய்யுள் வடிவமான மூலத்தைப் படிப்பதற்கு வேண்டிய இலக்கியப் பயிற்சி இல்லாத காரணத்தால், பாக்கியம் இந்த உரைநடைக் கதைகளை மட்டும் படிக்க முடிகிறது.
இலக்கியப் பயிற்சி இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருக்குமே என்று எண்ணினேன். இன்னும் பல உரைநடை நூல்களும் இருக்கக் கண்டேன்.
அன்று இரவு உணவுக்குப் பிறகு நான் திண்ணைமேல் சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தேன். மறுபடியும் எப்படியோ பட்டுப்புடவை பற்றிய பேச்சு நடப்பது கேட்டது. மெல்ல எழுந்து சன்னல் பக்கம் உட்கார்ந்து கேட்டேன். எனக்கு முதலில் கேட்டது மனைவியின் குரல்தான்.
"எல்லாரும் பட்டு உடுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டால், பட்டு நெசவாளர்கள் என்ன ஆவார்கள்? பட்டு வியாபாரிகள் என்ன ஆவார்கள்?" என்றாள் மனைவி.
அம்மா சிரிக்க, மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.
"நாம் வீடுகளுக்கு வலுவான கதவும் சன்னலும் வைத்து, உறுதியான தாழ்ப்பாளும் போட்டு இரவில் படுத்துக் கொள்கிறோம். வாசலுள் யாரும் இறங்கி வராதபடி வாசலிலும் கம்பிகள் போட்டுவிடுகிறோம். எல்லோரும் இப்படிச் செய்தால் திருடர்கள் எப்படிப் பிழைப்பார்கள்? அவர்களுடைய மனைவி மக்கள் என்ன ஆவார்கள்?" என்றார் பாக்கியம்.
இப்போது என் மனைவியும் சேர்ந்து ஒரே ஆரவாரமாகச் சிரித்தது கேட்டது.
"பட்டுத் தொழிலும் வீட்டில் திருடுவதும் ஒன்றுதானா?" என்று சிரித்தபடியே மனைவி கேட்டாள். "வேறுபாடு உண்டு. திருடுகிறவன் பசிக்காகத் திருடுகிறான். ஆடம்பரத்துக்காகத் திருடவில்லை. ஆனாலும் அது குற்றமே. உணவுக்காக ஆடு மாடுகளை வெட்டுகிறார்கள். அதுவும் குற்றமே. ஆனாலும் ஆடம்பரத்துக்காக கொலை செய்யவில்லை. பட்டுத் தொழில் இந்த இரண்டையும் விடக் கொடுமையானது. பட்டுப் பூச்சிகளைத் தீனியிட்டு வளர்க்கிறார்கள். நூலுக்குள் சுற்றிக்கொண்டு கிடக்கும் நிலை வந்ததும் கொதிக்கும் நீரில் அந்தப் பட்டுப் பூச்சிகளை அப்படியே உயிரோடு போட்டுச் சாகடிக்கிறார்கள். பிறகு வெளியே எடுத்து, நுலைச் சேர்த்துக் கொண்டு செத்த உடம்புகளை எரிக்கிறார்கள். ஆடம்பரத்துக்காகச் செய்யும் கொலை