(Reading time: 29 - 57 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

  

"உண்மையான கட்சி நான் சொல்கிறேன். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கம் தவறாதவர்களுக்குத்தான் முதல் மதிப்பு உண்டு. ஆனால் ஒன்று எண்ணிப்பார்க்க வேண்டும். சிலர் மணலில் நடக்கிறார்கள். சிலர் சேற்றில் நடக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். யார் வழுக்கி விழுந்தால் பெருந்தவறு?" என்றார்.

  

"சேறு வழுக்கும். விழுந்தால் தப்பு இல்லை, மணலில் நடப்பவன் விழுந்தால் அது தான் பெரிய குற்றம்" என்றார் அம்மா.

  

"அதுபோல்தான் ஆண்பெண் வாழ்க்கை. ஆணின் வாழ்க்கை வெளியே பலரோடு பழகித் திரியும் வாழ்க்கை. பலரோடு பழகுவதால் மனம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு. ஒழுக்கம் கெடுவதற்கும் வழி உண்டு. சேற்றில் நடந்து வழுக்குவது போன்றது அது. பெண்ணின் வாழ்க்கை குடும்பத்தளவில் பெரும்பாலும் இருந்து, கணவனோடும் மக்களோடும் பழகி அமையும் வாழ்க்கை. மனம் கெடுவதற்கும் வாய்ப்பு இல்லை; ஒழுக்கம் தவறுவதற்கும் வழி இல்லை. மணலில் நடப்பது போன்றது இது. ஆகையால் தவறி விழவே கூடாது. விழுந்தால் நொண்டியாக இருக்க வேண்டும் அல்லது நோயாளியாக இருக்க வேண்டும்."

  

இவ்வாறு பேசிய பேச்சு முடிவதற்குள் தங்கை குறுக்கிட்டு, "இந்தக் காலத்தில் பெண்களும் வீட்டைவிட்டு வெளியே போய்ப் பலரோடு பழகவேண்டியிருக்கிறதே" என்றாள்.

  

"படித்துவிட்டு வேலைக்குப்போகும் பெண்களைச் சொல்கிறாய். அவர்கள் மணலில் நடப்பவர்கள் அல்ல, சேற்றில் நடப்பவர்கள். ஆகவே வழுக்கி விழுந்தால் மன்னிக்க வேண்டும். ஒரு முறை அனுபவப்பட்டு அறிவு பெற்ற பிறகாவது திருந்த வேண்டும். வெளியே பழகும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், ஊன்றுகோல் இல்லாமல் நடக்கக்கூடாது. புலனடக்கம் கட்டாயம் வேண்டும். திருமணம் ஆகாத பெண்களுக்கும், என்னைப் போல் கைம்பெண்களுக்கும் ஊன்றுகோல் இருந்தாலும் போதாது. எங்கள் வாழ்க்கை மலைச்சரிவில் பெருங்காற்றில் நடப்பது போன்றது. நாங்கள் நிமிர்ந்து கைவீசி நடக்க ஆசைப்படவே கூடாது. மண்ணோடு மண்ணாய் ஒட்டிப் பற்றிக் கொண்டு நடக்க வேண்டும். இல்லையானால் பெருங்காற்றில் கால் தவறினால் புரண்டு விழுந்து அழிய வேண்டியதுதான்" என்றார் பாக்கியம்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.