"சரிதான் அக்கா! கண்ணகிபோல் பயந்து அடங்கிப் பதில் பேசாமல் வாழ்க்கை நடத்தவேண்டும் என்று சொல்கிறாய்" என்றாள் தங்கை.
"அதுதான் நல்லது" என்றார் அம்மா.
பாக்கியம் மறுத்தார். "இதுதானா நீ படித்தது? அந்தச் சிலப்பதிகாரக் கதையைப் படித்ததும் உண்மையைத் தெரிந்து கொள்ளவில்லையே. கண்ணகியா பயந்த பெண்? அவளைப் போல் அஞ்சாமையும் வீரமும் யாருக்கு உண்டு? காந்தி பட்டினி கிடப்பதைப் பார்த்து அவரைக் கோழை என்று ஒரு வெள்ளைக்காரன் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது உன் பேச்சு! துன்பம் பொறுப்பவர்கள் கோழைகள் அல்ல. கொள்கையோடு அமைதியாய் இருப்பவர்கள் கோழைகள் அல்ல. கண்ணகி பயந்த பெண் அல்ல என்பதற்கு அந்தக் கதையிலேயே பல இடங்கள் வருகின்றனவே. தோழி ஒருத்தி சந்திர சூரிய வழிபாட்டுக்கு அழைக்கிறாள். கணவனுடைய மனத்தை மாற்றுவதற்கு அது உதவும் என்கிறாள். கண்ணகி அது தகாத வழி என்று உடனே மறுத்துவிடுகிறாள். செப்பனிட்ட பாதைபோல் இருந்தது கண்ணகியின் வாழ்க்கை. அதில் தடுமாற்றமே இல்லை. மதுரையில் அயலார் வீட்டில் இருக்கும்போது கணவன் செய்த தவறு இப்படிப்பட்டது என்று எடுத்துக் காட்டுகிறாள். கணவன் கொலையுண்ட பிறகு, அரசனை எதிர்த்து எவ்வளவு பேசுகிறாள்!" என்றார்.
"கோவலன்" என்று எதையோ கேட்கத் தொடங்கிப் பேசாமல் நிறுத்தினாள் மனைவி.
"கோவலன் செய்தது தவறுதான். என் மனத்துக்கே அது வருத்தமாக இருக்கிறது. பல ஆண்கள் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தது பெருங்குற்றம்" என்றார்.
"ஆண்கள் மட்டும் அப்படித் தவறு செய்யலாமா?" என்றாள் மனைவி.
"செய்யகூடாதுதான். ஆனால்" என்று நிறுத்தினார்.
"ஏதோ சமாதானம் செய்து மழுப்பப் பார்க்கிறீர்கள்! நீங்கள் எப்போதும் ஆண்களின் கட்சியே" என்றாள் தங்கை.