(Reading time: 29 - 57 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

ஸ்வெயிட்சர் என்ற மருத்துவர் - பெரிய விஞ்ஞானி ஒருவர் - புல்மேல் கால்வைத்து நடக்கமாட்டாராம்" என்றார்.

  

"இவைகள் எல்லாம் நடக்க முடியாத விதிகள்" என்றாள் தங்கை.

  

"நடக்க முடிந்தவை என்று சிலவற்றை ஏற்படுத்திக் கொண்டு, அவைகளையாவது கடைப்பிடிப்போம். அதுவும் செய்யாமல், பழையபடியே இருந்தால் பயன் என்ன?" என்றார் பாக்கியம்.

  

"அப்படியானால் உனக்குப் பூவும் வாங்கிக் கொடுக்க மாட்டார் உன் வீட்டுக்காரர்" என்றாள் மனைவி.

  

"அவர் கையால் வாங்கிக் கொடுப்பதில்லை. ஆனால் நானாகப் பூ வாங்கிக் கொண்டால் தடுப்பதில்லை."

  

பாக்கியம் குறுக்கிட்டு, "பார்த்தாயா? அவருடைய கொள்கையாக இருந்தும், இந்தப் பூ வகையில் உன் விருப்பம் போல் நடப்பதற்கு விட்டுக்கொடுத்திருக்கிறார். இந்த அன்பை நீ உணரவில்லையே" என்றார்.

  

"உணராமலா நல்லபடி வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறேன்? என்ன அக்கா, அப்படிச் சொல்லிவிட்டாயே!" என்றாள் தங்கை.

  

"தாய் தந்தைக்கு அடுத்தபடி கணவர்தான் அன்பு மிகுந்தவர். தன்னலம் இல்லாத ஆளாக இருந்தால் அந்த அன்பு நாளடைவில் வளர்ந்து பெருகும். முதலில் பொறுமையோடு அவர் வழியில் நடந்தால், காலம் செல்லச் செல்ல முழுதும் உன் வழியில் வந்துவிடுவார். உலகத்தில் பார்! பெண்கள் இட்ட கோட்டைக் கடக்காமல் எத்தனை ஆண்கள் வாழ்கிறார்கள்? பயந்து வாழ்கிறவர்களைக் கணக்கில் சேர்க்க வேண்டா, அன்பால் முழுதும் விட்டுக்கொடுத்து வாழ்கிற கணவன்மார் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்" என்றார் பாக்கியம்.

  

"இரண்டு பேரும் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியதுதான். ஒரு மாடு மட்டும் இழுத்து இன்னொரு மாடு சும்மா இருந்தால் வண்டி போகுமா?" என்றார் அம்மா.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.