Flexi Classics தொடர்கதை - பனித்துளி - 01 - சரோஜா ராமமூர்த்தி
தை பிறந்தது.
உதய சூரிய ன் பொன் கிரணங்கள் பொன்மணிக் கிராமத்தின் வயல் வரப்புகள் மீது தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. அதி காலையில் புகை மாதிரி எங்கும் படர்ந்திருந்த பனித் திரையை விலக்கிக்கொண்டு சூர்யோதயம் ஆயிற்று. மார்கழி மாசமாதலால் பஜனை கோஷ்டி ஒன்று பெருமாள் கோவிலிலிருந்து கிளம்பி, கிராமத்தின் வீதிகளில் பாடிக்கொண்டு போயிற்று. சூர்ய உதயத்துக்குள் கிராம வாசிகளில் பெரும்பாலோருக்கு ஸ்நானபானாதிகள் முடிந்துவிடும் என்பதற்கு அத்தாட்சி யாக பெண்கள் குளத்தில் குளித்துவிட்டு, இடுப்பில் குடத்துடன் ஆலயத்தைப் பிரதட்சிணம் செய்து கொண்டு தத்தம் வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்தனர். வயல்களில் நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்தன. இன்னும் பதினைந்து தினங்களில் பொங்கல் திருநாள் வருகிறது. உற்றார் உறவினருடன் உழைப்பின் உழைப்பின் பலனை அனுபவிக்க விவசாயிகள் அந்தத் திருநாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். தான் பெற்ற சேயை அன்புடன் தழுவிக் கொள்வதுபோல் அந்தக் காலை நேரத்தில் வயலில் பழுத்துச் சாய்ந்திருக்கும் நெற்கதிர்களை விவசாயிகள் ஆசையுடனும் பெருமையுடனும் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
பஜனை கோஷ்டியில் முக்கியமாகச் சிரத்தையுடன் பங்கெடுத்துக் கொண்டவர்களில் உபாத்தியாயர் ராமபத்திர அய்யரும் ஒருவர். வறுமையிலும் கஷ்டத்திலும் உழலும் அவர், மனச் சாந்தியை வேண்டியே பகவத் பஜனையில் ஈடுபட்டார் என்று சொன்னாலும் பொருந்தும். பஜனை கோஷ்டி பெருமாள் கோவிலை மறுபடி அடைந்ததும் அங்கு அர்ச்சகர் தயாராக வெண்பொங்கலும், மிளகுப் பொங்கலும் கமகமவென்று மணக்க வைத்துக்கொண்டு காத்திருந்தார். பனிக் காற்றில் ஊரைச் சுற்றி வந்தவர்களுக்குச் சுடச் சுடப் பிரசாதத்தைப் பார்த்ததும் நாக்கில் தண்ணீர் ஊறியது.
"ஓய்! சாமாவய்யரே! கொஞ்சம் பின்னாடி நகருங் காணும்!" என்று சொல்லிக் கொண்டே தேசிகர் முன்னாடி வந்து தம் இரு கைகளை நீட்டி, ஆவலுடன் பொங்கலை வாங்கிச் சுவைத்தார்.
"இந்தாரும், ஸ்வாமி! உமக்கு இன்னும் கொஞ்சம் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளும்'' என்று ராம் பத்திரய்யர் மிளகுப் பொங்கலை தேசிகரிடம் நீட்டினார்.
“அடாடா! பெருமாள் கோவில் பிரசாதம்னா தேவாமிர்தம், சார்! எப்படி பாகம் செய்திருந்தாலும்