உட்கார்ந்து சிரம பரிகாரம் கூட செய்து கொள்ளாமல் நேராக ஜோஸ்யரின் வீட்டை அடைந்தார் ராமபத்திரய்யர்.
அவர் உள்ளே நுழைந்தபோது மணி பகல் சாப்பாட்டிற்கு அப்புறம் விச்ராந்தியாகக் கூடத்தில் உட்கார்ந்து பத்திரிகைகளுக்கு ஜோஸ்யப் பகுதிகளுக்கு வேண்டிய விஷயங்களைச் சேகரித்து வைத்துக் கொண் டிருந்தார். கூடத்தில் பெரிய அளவில் ஆஞ்சநேய ஸ்வாமியின் படமும், அம்பாளின் படமும் மாட்டி இருந்தன. கூடத்தை அணுகும்போதே தூபத்தின் சுகந்தமும், மலர்களின் நறுமணமும் அவரை ஒரு பக்தர் என்று பறைசாற்றின். ராமபத்திரய்யர் உள்ளே வந்ததும், "என்ன அய்யர்வாள், எங்கே இவ்வளவு தூரம் வெயிலில்?" என்று அவரை இன்முகத்துடன் வரவேற்றார் ஜோஸ்யர் மணி.
"சாப்பாடு எல்லாம் ஆயிற்றா? என்று கேட்டுக் கொண்டே நெற்றியில் வழிந்தோடிய வியர்வையைத் துண்டினால் துடைத்துக் கொண்டே அவர் எதிரில் உட்கார்ந்தார் ராமபத்திரய்யர்.
"அதெல்லாம் அப்பொழுதே முடிந்து விட்டது. எங்கே இவ்வளவு தூரம்?" என்று கேட்டார் ஜோஸ்யர் மணி.
"தை பிறக்கப் போகிறதே, குழந்தைக்கு இந்த வருஷமாவது ஏதாவது வரன் குதிர்ந்து ஆக வேண்டும், அப்பா! வயதாகி விட்டது பார்" என்று சொல்லிவிட்டு, ஜாதகத்தை எடுத்து அவர் முன்பு வைத்தார் ராம பத்திரய்யர்.
ஜோஸ்யர் மணி 'சூள்' கொட்டினார். பிறகு தலையைச் சொறிந்து கொண்டு, "இரண்டு வருஷமாகப் பார்த்துக் கொண்டிருக்கிற ஜாதகம் தானே? திரும்பத் திரும்ப என்ன இருக்கிறது பார்க்கிறதற்கு? பேசாமல் ஜாதகத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு சகுனத்தைப் பார்த்து ஏதாவது வரன் வந்தால் முடித்துவிடும்” என்று சொல்லிக் கொண்டு ஜாதகத்தை ராமபத்திரய்யரிடமே திருப்பி நீட்டினார்.
"கொஞ்சம் பார்த்துத்தான் சொல்லேன்?" என்று ராமபத்திரய்யர் கேட்கவும், "குரு பலன், யோக ஜாதகம் முதலிய எல்லா விஷயங்களையும் மீறி பகவத் சங்கல்பத்தால் விவாகம் நடைபெறுகிறது பகவானுடைய அருளினால் இந்த கட்டாயம் கல்யாணம் நடந்து விடும்" என்று