அதற்கென்றே தனி மணமும், ருசியும் ஏற்பட்டு விடுகிறது பாருங்கள்" என்று சொல்லிக் கொண்டே சுப்பாமணி அந்த அமிர்தத்தை மேலும் ரசித்துச் சாப்பிட்டார்.
'ஆமாம், ராமபத்திரா! இந்த வருஷமாவது உன் பெண்ணுக்கு எங்கேயாவது ஒரு இடம் குதிருமா? வயசு ஏகப்பட்டது ஆகிறதே?" என்று சுப்பாமணி பொங்கலைக் குதப்பிக் கொண்டே கேட்டார்.
ராமபத்திரய்யர் கலக்கத்துடன் மூல ஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும் தாயாரையும், பெருமாளையும் பார்த்து விட்டு, என்னைக் கேட்கிறாயே,சுப்பாமணி! அதோ பேசாமல் என்னைச் சஞ்சலத்தில் ஆழ்த்தி வேடிக்கை பார்க்கும் பெருமாளைக் கேளேன் இந்த விஷயம் நமக்குப் புரியாத விஷயமாக அல்லவா இருக்கிறது?" என்றார்.
"தெய்வம் வந்து உன்னோடு நேரில் பேச வேண்டும் என்கிறாயா? போடா பைத்தியக்காரா!” என்று கூறிவிட்டு தமக்கு முக்கியமான வேலை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார், சுப்பாமணி என்கிற சுப்பிரமணிய அய்யர்.
ராமபத்திரய்யர் யோசனையில் மூழ்கியவாறு வீட்டை அடைந்தார்.
அவர் வீட்டை அடையும்போது அவர் பெண் காமாட்சி கூடத்தில் இருக்கும் படங்களுக்குப் புஷ்பமாலை போட்டு, குத்துவிளக்கேற்றி நமஸ்கரித்துக் கொண் டிருந்தாள். அவள் மனத்திலும் அன்று காலையிலிருந்து ஏக்கமும் கவலையும் நிரம்பி இருந்தன.
ராமபத்திரய்யர் பெண்ணைச் சிறிது நேரம் கவனித்து விட்டுப் பெருமூச்சுடன் அங்கு இருக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டார்."இன்னும் பதினைந்து தினங்களில் தை பிறக்கப் போகிறது. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். ஆனால் கடந்த ஐந்து வருஷங்களாகத் தை மாதம் பிறந்து, கல்யாண மாசங்களெல்லாம் வெறும் மாதங்களாக மறைந்து விடுகின்றன. நம்பிக்கைக்கு இடம் இல்லாமல் அல்லவா தை மாதம் பிறக்கிறது?” என்று யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் அவர்.
''அப்பா! 'பென்ஷன்' வாங்க ராஜம்பேட்டைக்குப் போக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே? சாப்பிட்டு விட்டுத்தானே போகப் போகிறீர்கள்? வெயில் பொசுக்கி