வைத்தாள். அவளைப் பார்த்து ராமபத்திரய்யர், "காமு! இங்கே வந்திருப்பது யார் என்று உன் அம்மாவுக்குத் தெரியாது. யாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள், போய் அவளை அனுப்பு" என்று சொன்னதும் காமு தலையை அசைத்து விட்டு உள்ளே சென்றாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் விசாலாட்சி புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்டு வந்து தூண் ஓரமாக நின்றாள். கொஞ்சம் யோசனை செய்து விட்டு, "யார் இது, தெரியலியே?” என்று ராமபத்திரய்யரைப் பார்த்துக் கேட்டாள்.
"நடேசன் பிள்ளை. ஜாடையைப் பார்த்தால் தெரியலையோ?”
"ஊரிலே எல்லாரும் சௌக்கியமா அப்பா: உன் தமக்கை இப்போது எங்கே இருக்கிறாள்? உன் அத்திம்பேர் சரிவர நடந்து கொள்கிறாரா? உன்னோடு பிறந்தவா எத்தனை பேர்?" என்று கேள்விமாரியாகக் கேட்க ஆரம்பித் தாள் விசாலாட்சி.
''மாமிக்குக் குடும்ப விஷயம் பூராவும் தெரியும்போல் இருக்கே மாமா!...... அத்திம்பேர் இனிமேலாவது சரியாக இருக்கவாவது? அவர் ரங்கூனிலேயே அந்தப் பர்மாக் காரியோடு தங்கி விட்டார். மாசா மாசம் அக்காவுக்கும், குழந்தைகளுக்கும் இருநூறு ரூபாய் அனுப்புகிறார். என் தமையன் ஒருவன் மேல் படிப்புக்காக அமெரிக்கா போய் இருக்கிறான். அவனுக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. அங்கே வெள்ளைக்காரியுடன் நிரந்தரமாகத் தங்கிவிட்டான். மன்னியையும், குழந்தையையும் நாங்கள் தான் வைத்துக் காப்பாற்றுகிறோம். என்னவோ அப்பா நிறைய சம்பாதிக்கிறாரே தவிர, குடும்பத்தில் சுகத்தைக் காணோம்!" என்று சங்கரன் அலுத்துக் கொண்டான்.
"சம்சாரம் என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும். சுகமும், துக்கமும் சம்சாரத்தின் இரு சக்கரங்கள். இரண்டையும் மாறி மாறி அனுபவித்துத் தான் ஆக வேண்டும் அப்பா! தெரியாமலா பெரியவர்கள் சம்சாரத்தைச் சாகரத்துக்கு ஒப்பிட்டார்கள்? சமுத்திரத்தில் முத்தும் பவழங்களும் விளைவது போலவே பயங்கரமான ஜந்துக்களும் இருக்கின்றன அல்லவா?"
ராமபத்திரய்யரின் ஆழ்ந்த கருத்தமைந்த சொற்களைப் பணிவுடன் கேட்டுக் கொண்டிருந்தான் சங்கரன். 'உனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே?" என்று சங்கரனைப் பார்த்து