Flexi Classics தொடர்கதை - பனித்துளி - 09 - சரோஜா ராமமூர்த்தி
சர்மா வீட்டில் சம்பகம்
வருஷப் பிறப்புப் பண்டிகை நெருங்கி வந்து கொண் டிருந்தது. சொல்லி வைத்தாற் போல் புடவைக்காரன் ஒரு மூட்டைப் புடவையோடு சர்மாவின் வீட்டிற்கே வந்திருந் தான். அடுக்கடுக்காகப் பீரோவிலும், பெட்டியிலும் பட்டுப் புடவைகள் மக்கிப் போய்க் கொண்டிருக்கும் போதே மேலும் மேலும் வாங்கிப் பெட்டியில் அடைத்து வைப்பதில் பெண்களுக்கு ஒரு திருப்தி. கோவிலிலோ, பெண்கள் சங்கத்திலோ, கடைத்தெருவிலேர் தெரிந்தவர்கள் பார்த்து "பண்டிகைக்கு என்ன புடவை வாங்கினாய்?" என்று கேட்டால், "மாம்பழக்கலர், தாமரைக்கலர், "பட்டன் சாட்டர்" மாங்காய்க் கரை, விலை நூறு ரூபாய், நூற்றைம்பது ரூபாய்" என்றெல்லாம் பெருமையாகச் சொல்ல வேண்டாமா? அதற்காகவே மேலும் மேலும் வாங்கிக் கொண்டிருந்தார்கள். புடவைக்காரனிடம் புடவைகளை வாங்கிக் கொண்டு சர்மாவிடம் சொல்லி விட்டால், பணத்தை அவர் கொடுத்து விடுவார்.
மீனாட்சி அம்மாள் புது நாட்டுப் பெண்ணுக்கு உயர்ந்த விலையில் புடவை வாங்கினாள். நாலு பேருக்கு நடுவில் பெருமையாக இருக்க வேண்டாமா? சம்பந்திகளுக்கு அவள் எந்த விதத்திலும் அந்தஸ்தில் குறைந்தவள் இல்லை என்பதைக் காட்டவே சாண் அகல ஜரிகைக் கரைப் போட்ட புடவையை வாங்கி இருந்தாள். இல்லாவிடில் பைஜாமாவும், ஜிப்பாவும் சதா அணிந்து ஊர் சுற்றும் பெண்ணுக்கு இவ்வளவு விலை உயர்ந்த புடவை எதற்கு?
ருக்மிணி அவளுக்கு வேண்டியதைப் பொறுக்கி எடுத்துக் கொண்டாள். மதிப்பாக நாலு பேர் எதிரில், "அடுத்த மாசம் அவர் பணம் அனுப்பியதும் கொடுத்து விடுகிறேன்' என்று புடவைக்காரனிடம் சொல்லிக் கொண்டாள். அவள் வாங்கும் புடவைகளுக்கும் சர்மாதான் பணம் கொடுத்து வந்தார். ஆனால் ஒவ்வொரு தடவையும் அவள் அப்படித் தான் சொல்லுவது வழக்கமாக இருந்தது.
புடவை அமர்க்களத்தில் சம்பகம் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. பகட்டான சேலைகளையும், வித விதமான அலங்காரங்களையும் அவள் விட்டு வெகு காலம் ஆயிற்று. சாதாரண நூல் புடவையையும், பசேல் என்று மஞ்சள் பூசி நெற்றிக்கு இட்டுக் கொள்வதையுமே பாக்கியமாகக் கருதுபவள் அவள்.
புடவை பேரம் நடந்து கொண்டிருந்த போது சங்கரன் வராந்தாவில் உட்கார்ந்து கொண்டிருந்தான். கணவன் வீட்டில் இருப்பதையும் லட்சியம் பண்ணாமல் நீலா பிறந்த