ஆடையும், அலங்காரமும் வேண்டுமா?" என்று கேட்பது போல் இருந்தது அந்த முக பாவம்.
சர்மா நிலைப்படியைக் கையால் தாங்கிக் கொண்டு நின்றார். பிறகு மனத்தை அ.ழுத்தும் கஷ்டத்துடன் அங்கிருந்து ஹாலுக்குச் சென்று விட்டார்.
தகப்பனாருக்கும், மன்னிக்கும் நடந்த பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான் சங்கரன். வீட்டில் பண்டிகை அன்று எல்லோரும் புத்தாடை உடுத்திக் குதூகலமாக வளைய வரும்போது, அவள் மட்டும் பழைய ஆடையுடன் நிற்கலாமா என்று தோன்றியது அவனுக்கு. அன்று மாலையில் வெளியே சென்று திரும்பிய சங்கரன் கையில் ஒரு காகிதப் பொட்டலத்துடன் வந்தான்.
நேராக சமையற்கட்டுக்குப் போய் சம்பகத்தினிடம் பொட்டலத்தைக் கொடுத்தான். சம்பகம் ஒன்றும் தெரியாமல் விழித்தாள்! "என்ன இது?” என்று தடுமாறிக் கொண்டே கேட்டாள். பொட்டலத்துக்குள் கறுத்த பச்சையில் மஞ்சள் கோடு போட்ட நூல் புடவை ஒன்று இருந்தது. "உங்களுக்காகத்தான் வாங்கி வந்தேன். நீங்கள் பண்டிகைக்காக ஒன்றுமே வாங்கிக் கொள்ளவில்லையே!" என்றான் சங்கரன்,
'விசுக் விசுக்'கென்று பட்டுப் புடவை உராய ருக்மிணி அந்தப் பக்கம் வந்தாள். இரண்டு படி தவலை போல் முகத்தை 'உப்'பென்று வைத்துக் கொண்டு, "என்னடா! மன்னியோடு ரகசியம் பேசுகிறாய்? யாருக்குப் புடவை வாங்கி இருக்கிறாய், நீலாவுக்கா? அம்மா தான் நூற்றைம்பது ரூபாய் கொட்டி வாங்கி இருக்கிறாளே? நீ வேறு வாங்கினாயா என்ன?" என்று
சட்டசபையில் அடுக்கடுக்காக உதிரும் கேள்விகளைப் போல் கேட்டு அவனைத் திணற வைத்தாள்.
"நீலாவுக்கு இல்லை, மன்னிக்குத்தான் வாங்கினேன்! அவள்தான் பட்டுப் புடவையே உடுத்துவது இல்லையே!”
உப்பி இருந்த ருக்மிணியின் முகம் சப்பென்று வாடியது. ''சம்பகத்துக்குச் சங்கரன் புடவை வாங்கிக் கொடுக்கவாவது வயசு வந்த மைத்துனன் மன்னிக்குப் புடவை வாங்கிக் கொடுக்க என்ன கரிசனம் அவனுக்கு? பூனை மாதிரி இருந்து கொண்டு இந்தச் சம்பகம் என்ன ஆட்டம்