முற்றத்தில் வந்து உட்கார்ந்தாள். பகலெல்லாம் வேலை செய்து அலுத்துப் போய் இரவு தூக்கம் வராததால் தலையை வலித்தது அவளுக்கு. தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்த அவள் எதிரில் சங்கரன் நின்றிருந்தான்.
“தூங்காமல் இந்த நேரத்தில் இங்கே என்ன பண்ணுகிறீர்கள் மன்னி?” என்று கேட்டான் அவன்.
''நள்ளிரவில் சங்கரன் கேட்பதற்கு அவனுடன் உட்கார்ந்து கொண்டு பதில் சொல்லலாமா? அவன் ஏன் கீழே இறங்கி வந்தான்? இரவு நேரத்தில் மாடியிலிருந்து ஏன் கீழே இறங்கி வர வேண்டும்?" என்றெல்லாம் சம்பகம் எண்ணித் தவித்தபோது, சங்கரன் தொடர்ந்து பேசினான்.
"நீலா குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து வைப்பதற்கு மறந்து விட்டாள். என் பேரில் ஏதோ கோபித்துக் கொண்டு தூங்குகிறாள். குடித்து விட்டுப் போவதற்கு வந்தேன் நீங்கள் தூங்காமல் இப்படி உடம்பைக் கெடுத்துக் கொள்ளலாமா மன்னி? என்றாவது நீங்கள் அண்ணாவுடன் சேர்ந்து சந்தோஷமாக இருக்கப் போகிறீர்கள்" என்று இன்னும் ஏதோ பேச வாயெடுத்தான் சங்கரன்.
மாடி அறையில் பளிச்சென்று நீல விளக்கு எரிய ஆரம்பித்தது. மாடிப் படிகளின் கைப்பிடிச் சுவரைத் தாங்கிப் பிடித்தபடி நீலா நின்றிருந்தாள்.
"போய்ப் படுத்துக் கொள்ளுங்கள். நீலா எழுந்து விட்டாள்!" என்று கூறிவிட்டுச் சம்பகம் அவசரமாக எழுந்து குடத்திலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் கொண்டு வந்து சங்கரன் எதிரில் வைத்துவிட்டு உள்ளே போய் விட்டாள். மறுபடியும் மாடிக்குச் சங்கரன் போன போது உள்ளே விளக்கு அணைக்கப்பட்டு இருந்தது. தாழ்ப்பாளும் உட்புற மாகப் போட்டுக் கொண்டு நீலா படுத்துக் கொண்டு விட்டாள்.
சங்கரன் லேசாக இரண்டு முறை கதவைத் தட்டி, 'நீலா" என்று அழைத்தான். பிறகு பலமாக இரண்டு முறை கதவைத் தட்டினான். 'படக்'கென்று தாழ்ப்பாளை விலக்கிய நீலா, சரசரவென்று மாடிப் படிகளில் இறங்கி கூடத்தில் விரித்திருந்த ரத்தினக் கம்பளத்தின் மீது பொத் தென்று விழுந்து படுத்துக் கொண்டாள்.
சம்பகத்தின் நெஞ்சம் காய்ந்து வரண்டது. நீலாவின் கால்களைப் பிடித்துக் கொண்டாகிலும்,