வீட்டிற்குப் போய் இருந்தாள். பகல் சாப்பாடு மாமியார் வீட்டில் இருந்தால், இடைவேளை சிற்றுண்டி பிறந்த வீட்டில் என்று வைத்துக் கொள்வது அவள் வழக்கம். பிறகு இஷ்டமிருந்தால் மாலையில் வந்து கணவனைத் தன்னுடன் வெளியே உலாவ அழைத்துப் போவாள்; இல்லாவிடில் இரவு சாப்பாட்டையும் பிறந்த வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வந்துவிடுவாள். ஊதா வர்ணத்தில் நீலாவுக்காக வாங்கியிருந்த புடவையைக் கொண்டு போய்ச் சங்கரனிடம் காண்பித்தாள் மீனாட்சி அம்மாள்.
“ஐந்து கஜம்! நூற்றைம்பது ரூபாய்!" என்று பெருமையுடன் சொல்லிவிட்டு, உனக்குக் கலர் பிடிக்கிறதாடா?" என்று கேட்டாள்.
“எனக்குப் பிடித்து என்ன ஆகவேண்டும்? நானா கட்டிக்கொள்ளப் போகிறேன்? அதுவும் உன் நாட்டுப் பெண் சதா 'பைஜாமா' போட்டுக் கொண்டே திரிகிறாளே? அவளுக்கு எதற்குப் புடவை?" என்று கேட்டான் சங்கரன்.
“அது எப்படியாவது இருக்கட்டுமடா! நாம் செய்வதை நாம் செய்தால்தான் நன்றாக இருக்கும். எத்தனையோ புடவைகள் அவள் பிறந்தகத்தில் வாங்கியிருக்கிறார்கள். நாம் ஒன்றுகூட வாங்காமல் இருந்தால் நன்றாக இருக்குமா?” என்று கேட்டாள் மீனாட்சி.
“ஊருக்காகப் பால் குடிப்பதா? உடம்புக்காகப் பால் குடிப்பதா?" என்று சொல்வார்கள். இருதயப் பூர்வமான அன்புடன் புடவையை நீலாவுக்கு வாங்கி அளிக்கவில்லை மீனாட்சி. நாலுபேர் மெச்சிப் பேசுவதற்குத்தான் அந்தப் புடவையை வாங்கி இருக்கிறாள்.
வியாபாரம் முடிந்ததும் புடவைக்காரன் மூட்டையைக் கட்டிக் கொண்டு போய் விட்டான். அவன் போன பிறகு தான் இவர்கள் சம்பகத்துக்கு ஒன்றுமே வாங்கவில்லை என்று சர்மாவுக்கு நினைவு வந்தது. அடுப்பங்கரையில் வேலையாக இருந்த சம்பகத்தைத் தேடிப் போனார் சர்மா. ''ஏனம்மா! புடவைக்காரன் வந்திருந்தானே, நீ ஒன்றும் வாங்கிக் கொள்ளவில்லையா? அந்தப் பக்கம் பக்கம் வரவே இல்லையே நீ?” என்று கேட்டார் சம்பகத்தை இரக்கமாகப் பார்த்து.
“எனக்கு இப்போது எதற்குப் புடவை? வேண்டியது இருக்கிறதே" என்று பதில் கூறிய நாட்டுப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும், "எனக்குப் பொன்னும், புடவையும் வேண்டியதுதானா? யாருக்காக நான் அவைகளை அணிந்து உலாவ வேண்டும்? கணவனால் ஒதுக்கப்பட்டவளுக்கு