செய்தார் :
"ஏய், சரோ! இந்த மாதிரியா இன்ஸ்பெக்டர் ஐயா கிட்டே பேசறது? நானும் சப்-இன்ஸ்பெக்டர் ஐயாவும் சொன்னதுக்காக ஐயா, ஒன்ன விடுதலை செய்யறார். இன்ஸ்பெக்டர் ஐயா டெப்டி கமிஷனர்கிட்ட உனக்காக வாதாடி... போராடி ஒன்ன கொலை கேஸிலிருந்து விடுவிச்சிருக்கார்."
"அதுக்காக கொழந்தைய கடத்திட்டுப் போன நிசமான கேடிய விட்டுடாதீங்க சாரே."
"இப்படிக் கூடக் கூடப் பேசக்கூடாதுடி... இன்ஸ்பெக்டர் ஐயா கையில காலுல விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கிட்டு, முதல்ல வீட்டுக்கு போ."
"இல்ல சாரே, முதல்ல ஆஸ்பத்திரிக்குத்தான் போகணும் சாரே."
அங்கே எதுவும் நடக்காதது போல் எழுதிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டரின் காலில், சரோசா நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தாள். தரையில் வயிற்றைப் போட்டு மேசையின் அடிக்கம்பில் மார்பைப் போட்டு, அவர் கால்களைப் பிடித்துக் கொண்டு மன்றாடினாள்:
"இதே மாதிரி இனிமே காட்டியும் நான் தப்பு தண்டா செய்தாலும், சார்தான், என்னை மன்னிக்கணும். எங்கள மாதிரி ஆட்களுக்கு போலீச விட்டா யார் கதி சாரே?”
"இந்தாம்மா எழுந்திரு மொதல்ல. இது போலீஸ் ஸ்டேஷனா, கோவிலா?"
கரும்பு கான்ஸ்டபிள், இமிடியட் பாஸ்ஸான சப் இன்ஸ்பெக்டரை பொருட் படுத்தாமலேயே பேசினார் :
“ஐயா சொன்னத நல்லா கேட்டுக்கோ. சப்-இன்ஸ்பெக்டர் கையிலயும், இன்ஸ்பெக்டர் காலிலேயும் நான் ஒனக்காக விழுந்தேன். இன்ஸ்பெக்டர், டெப்டி கமிஷனர் காலில விழுந்து ஒன்ன விடுவிச்சிருக்கார். நீயுண்டு, ஒன் தொழில் உண்டுன்னு இருக்கணும். சொல்றது புரியுதா?"