பாமாவும், இளங்கோவும் சும்மாயிருந்தபோது, இன்ஸ்பெக்டர் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த ருக்குமணியை சுண்டுவிரலை ஆட்டிக் கூப்பிட்டார்.
"இந்தாம்மா! உன் பேர்தான் ருக்குமணியா? இவன் பேரு
தான் ஆறுமுகா?"
"ஆமாங்கய்யா..."
சப்-இன்ஸ்பெக்டர் குறுக்கே புகுந்தார் :
"ஏண்டி, ஒனக்கு மூளை இருக்குதா? குழந்தைய காணுமுன்னு போலீஸ்ல ரிப்போர்ட் செய்யத்தெரிஞ்சுதே, அது கிடைச்சுதுன்னு ஏண்டி சொல்லல?"
புருஷன்கூட பேச யோசிக்கும், 'டி'-யை அவர் காப்பி குடிப்பது மாதிரி பேசியதால், ருக்குமணி கூனிக்குறுகினாள். உடனே பாமா இன்ஸ்பெக்டரைப் பார்த்து "சார், இவர்... பேசறது டூ மச்” அந்தம்மாவும் ஒரு கொளரவமான குடிமகள்தான் என்றாள் அழுத்தம் திருத்தமாக. இன்ஸபெக்டர் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் பேசினார்:
"சரி, விஷயத்துக்கு வருவோம். டெப்டி கமிஷனர், சரோசாவை விடுதலை செய்யச் சொல்லல... குழந்தை கிடைச்ச பேக்ரவுண்டுல விசாரிக்கத்தான் சொன்னார். ஆனாலும், சரோசாவை விடுதலை செய்ய நான் தயாரா இருக்கேன். ஆனால், ஒண்ணு... அவள்கிட்ட பெரிய செட்டே இருக்குது.பழி பாவத்துக்கு அஞ்சாதவங்க. இளங்கோ கையோ, காலோ போனால், அதுக்கு நான் பொறுப்பில்ல. அவள் உள்ளே இருந்தாத்தான், உங்களுக்குப் பாதுகாப்பு. அதுக்குள்ள அவளோட செட்டும் சிதறிப் போயிடும். இல்ல பயந்துடம். ருக்குமணியோட குழந்தைய, சரோசா கடத்திக்கிட்டுப் போனதாயும், நாங்கதான், மீட்டிக் கொடுத்ததாயும் ஒரு கேஸ் போட்டு, அவள ஏழு வருஷம் உள்ளே தள்ளிடலாம். டெப்டி கமிஷனர் முகத்துக்காக நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யத் தயார். அவள் விடுதலையாகணுமா, இல்ல இளங்கோ உயிரோட இருக்கணுமா? ரெண்டுல ஒன்றைச் சொல்லுங்க..."