இப்போது அவருக்கு பாமா உயரத்தில் சிறிது குறைந்தது போல் தெரிந்தது. கால்மணி நேர கால்வலிப்புக்குப் பிறகு, பாமா அவசரப்படுத்தினாள் :
"சார், எப்போ பார்க்க முடியுமுன்னு சொல்லுங்க. இல்லாட்டா முடியாதுன்னாவது சொல்லுங்க. நாங்களும் பிசி தான்."
நேர்முக உதவியாளர், அவளுக்கு எரிச்சலோடு பதில் அளிக்கப் போனார். இவளுக்குத்தான் டெப்டி கமிஷனர் அங்கிளே தவிர, அந்த அங்கிளுக்கு இவளிடத்தில் பங்கில்லை என்பதால், விட்டிருந்தால், விளாசியிருப்பார். அதற்குள், டெலிபோனில் ஒரு கரகரப்பான சத்தம் வந்ததும், அவர் படபடப்பானார். பாமாவை போகலாம் என்பதுபோல் சைகை செய்தார்.
அந்த பிரும்மாண்டமான அறைக்குள் இளங்கோவும், பாமாவும் பக்குவமாகப் போனார்கள். சுழல்மெத்தை நாற்காலியை சுற்றிக் கொண்டே டெலிபோனில் பேசிக் கொண்டிருந்த டெப்டி கமிஷனரை பார்த்தபடியே, அங்கப்பிரதட்சணம் செய்வது போல் சென்றார்கள். திரும்பிப் பார்த்த பாமா, ருக்குமணி பின்னால் வராததைக் கண்டு பி.ஏ. ரூமிற்குப் போனாள். ஐந்து நிமிடத்திற்குப் பிறகு பல்வேறு வாக்குவாதங்களை முடித்து விட்டு, அவளையும், அவள் பையனையும் உள்ளே கூட்டி வந்தாள். டெலிபோனில் பேசிக் கொண்டிருந்த டெப்டி கமிஷனர் அதன் குமிழை மூடிவிட்டு "என்ன வேண்டும்” என்று கேட்டார். ஏதோ பதில் சொல்லப்போன இளங்கோவின் முதுகைக் கிள்ளிவிட்டு, பாமா சாதாரணமாக, பரபரப்பு இல்லாமல் பதிலளித்தாள்:
"நீங்க பேசி முடிங்க அங்கிள். எங்களுக்கு அப்படியொன்றும் அவசரம் இல்ல.'
அரசியல்வாதிகள், கேடிகள், கிரிமினல்கள் ஆகியோருடன் பழகிப் போன அந்த டெப்டி கமிஷனருக்கு, 'அங்கிள்' என்ற வார்த்தை நெகிழ்வைக் கொடுத்தது. அவளை உட்காரும்படி சைகை செய்தார். அவள் உட்கார்ந்ததும், அவளைப் போல் தானும் உட்காரலாமா என்று யோசித்த இளங்கோ, சிறிது நின்றுவிட்டு பிறகு உட்கார்ந்தான். ருக்குமணி ஜம்மென்று உட்காரப்போன மகனை காதைப் பிடித்துத் திருகி தன் பக்கத்தில் நிறுத்திக் கொண்டாள். டெப்டி கமிஷனர், ஒரு டெலிபோன் பேச்சை முடித்து விட்டு, அவர்களைப் பார்ப்பதும், மற்றொரு டெலிபோன் அறுக்க வருவதுமாக இருந்தது. ஒன்றில் “எஸ் ஸார்... எஸ் ஸார்” என்று குழைந்த அவர், இன்னொரு போனில், “என்னா மேன் செய்யறே? கொஞ்சமாவது மூளையிருக்கா?” என்று எரிந்தார். இப்படி ஒரே சமயத்தில் மெழுகுவர்த்தி மாதிரி குழைவதும்,