எரிவதுமாக இருந்த அவரைப் பார்த்த ருக்குமணி ரஜினிகாந்தை விட, இவர் பெரியவராக இருக்கலாமோ என்று சந்தேகப்படுவதுபோல் பார்த்தாள்.
டெலிபோன் மணிகளும், மைக் பிளிறலும் சிறிது நின்ற போது, பாமா குழந்தைத்தனமாகக் கேட்டாள் :
"அங்கிள், என்னை ஞாபகம் இருக்குதா? பத்து வயசுல உங்களைப் பார்த்தது... பட், உங்க அப்போதைய உருவம் இன்னமும் ஞாபகம் இருக்குது. டாடி... அதான் உங்க பிரண்ட் மிஸ்டர். ரமணன், சதா உங்களைப் பத்தியே போரடிப்பார். பரீட்சையில் உங்க பேப்பரைப் பார்த்து அவர் காப்பியடிச்சாராம், இதனால் உங்களுக்கு பெரிய சைபரும், அவருக்கு சின்ன சைபரும் கிடைச்சுதாம்.”
பாமாவின் சிரிப்போடு சேர்ந்து சிரிக்கப் போனார் டெப்டி. இதற்குள் ஒரு மேலிட மிரட்டல் டெலிபோன். கீழிட பிரார்த்தனை டெலிபோன். அதற்குள் பி.ஏ. கொண்டு வந்து கொடுத்த ஒரு பவர் புரோக்கரின் விசிட்டிங் கார்ட். அவரை உடனே பார்க்கா விட்டால் ஆவடி ஆயுத போலீசுக்குத்தான் போக வேண்டும். ஆகையால் அவசர அவசரமாய்க் கேட்டார்.
"சொல்ல வேண்டியதை ஒரு நிமிசத்துல சுருக்கமா சொல்லும்மா."
பாமா சுருக்கமாக எப்படிச் சொல்வது என்பதற்காக கால் நிமிடம் எடுத்துக் கொண்டாள். பிறகு நடந்த விவரத்தை ஒப்பித்துக் கொண்டிருந்தாள்.
டெப்டி கமிஷனர் அவளை இடைமறித்துக் கேட்டார்:
“இந்தப் பையனை கொலை செய்ததாய் கேஸ். ஓகே! பட், அப்படி நடக்கலே, சரிதானே? ஒங்க ஏரியா இன்ஸ்பெக்டரை போய்ப் பாரு. நான் மைக்கில பேசிடுறேன். சரோசாவையும் வார்னிங் கொடுத்து விட்டுடச் சொல்றேன். ஒன் பேரு என்னம்மா, ருக்குமணியா? குழந்தைய சரியா கவனிச்சுக்கத் தெரிஞ்சுக்கோ. பாமா! ஒரு நாளைக்கு சாவகாசமாக வீட்டுக்கு வா. உங்க அப்பாவ அங்கே வந்து என்ன ‘டா' போட்டு பேசலாமுன்னு சொல்லு. ஓகே!''
"தாங்க்யூ அங்கிள்” என்று சொல்லப்போன பாமா, அவர் இன்னொரு டெலிபோனில் பேசப்